கஞ்சா கருப்புக்கு தாங்க முடியாத சோகம்.. அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடன்பிறந்த தம்பி உயிரிழப்பு!
சிவகங்கை: நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி அறிவழகன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே அறிவழகன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் திரைப்பட நடிகர் கஞ்சா கருப்புவின் தம்பி உயிரிழந்தார். தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் கஞ்சா கருப்பு. ராம், பருத்தி வீரன், தாமிரபரணி என பல படங்களில் நடித்து புகழ் பெற்ற கஞ்சா கருப்புவின் சொந்த ஊர் சிவகங்கை ஆகும். இவருக்கு அறிவழகன் (வயது 45) என்ற தம்பி உள்ளார்.

சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த இவர் இன்று அதிகாலை சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் படுகாயம் அடைந்த அறிவழகன் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இதைக் கவனித்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், அறிவழகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்துதானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தம்பி உயிரிழந்ததை தாங்க முடியாத கஞ்சா கருப்பு, இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்க்கும் கோரிக்கை விடுத்துள்ளார். உருக்கமாக பேசிய கஞ்சா கருப்பு, "அதிகாலை 3 மணியளவில் டீ குடிக்க வெளியே சென்ற என் தம்பி மீது வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதுவரை அந்த வாகனம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தால் என் அம்மா மிகுந்த மனவேதனையில் இருக்கிறார். எந்த நேரத்திலும் உடைந்து போகும் நிலையில் உள்ளார். குறைந்தபட்சம் என் அம்மாவின் மனநிம்மதிக்காகவாவது இந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications