"சஞ்சய்யை கட்டாயப்படுத்த மாட்டேன்!" மகன் குறித்து மனம் திறந்து பேசிய விஜய்! மீண்டும் டிரெண்டிங்
சென்னை: விஜய் முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியில் அவரது குழந்தைகள் பங்கேற்காதது இணையத்தில் விவாதமாக வெடித்தது. இதற்கிடையே முன்பு ஒருமுறை விஜய் தனது மகன் சஞ்சய் குறித்துப் பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் சஞ்சய் நடிகர் ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இருப்பினும் அதைக் கட்டாயப்படுத்த மாட்டேன் என விஜய் கூறியிருந்தார். மேலும், தனது தந்தை எஸ்ஏசி குறித்தும் சில நெகிழ்ச்சி கருத்துகளை அவர் கூறியிருந்தார்.
தமிழக அரசியலில் விஜய், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்று ஒரு புதிய வரலாற்றுப் பக்கத்தைத் தொடங்கியுள்ளார். அவரது தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அவர் ஆட்சியை அமைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஞாயிற்றுக்கிழமை விஜய் பதவியேற்றார்.

விஜய்
ஆனால், இந்த தருணத்தில் அவரது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோர் பங்கேற்காதது விவாதத்தை ஏற்படுத்தியது.. ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் வரமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், விஜய்யின் குழந்தைகளும் வராதது விவாதத்தைக் கிளப்பியது.
இதற்கிடையே விஜய் தனது மகன் குறித்து முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அரசியல் வருவதற்கு முன்பு, 2022ல் 'பீஸ்ட்' பட புரமோஷனின் போது இயக்குநர் நெல்சனுடன் நடந்த நேர்காணலில் தனது மகன் சஞ்சய்யின் எதிர்காலம் குறித்து விஜய் மனம் திறந்திருந்தார். சஞ்சய் நடிகர் ஆக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் இருப்பினும் அதைக் கட்டாயப்படுத்த மாட்டேன் என விஜய் கூறியிருந்தார்.
சஞ்சய்
அவர் மேலும், "அவன் நடிகராக வேண்டும் என்று நான் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன். அவன் என்னவாகப் போகிறான் என்பது அவனது விருப்பம். பல இயக்குநர்கள் சஞ்சய்யை அறிமுகப்படுத்த என்னைத் தொடர்பு கொண்டனர். ஆனால் சஞ்சய் இப்போதைக்குத் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், இன்னும் சில ஆண்டுகள் அவகாசம் தேவை என்றும் கூறிவிட்டான். பிள்ளைகளுக்குத் தங்களின் பாதையைத் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை" என விஜய் அன்று தெரிவித்திருந்தார்.
எஸ்ஏ சந்திரசேகர்
தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் ஏற்பட்ட மோதல் குறித்தும் அந்த நேர்காணலில் விஜய் குறிப்பிட்டிருந்தார். விஜய்யின் அனுமதி இன்றி அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்ற எஸ்.ஏ.சி முயன்றபோது, அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என விஜய் பொது அறிக்கை விட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், தனது தந்தை மீதான மரியாதையை அவர் கைவிடவில்லை.
நெகிழ்ச்சி
அவர் மேலும், "ஒரு அழகான மரத்தின் பூக்களை நாம் ரசிக்கிறோம், ஆனால் அந்த வேர்களின் உழைப்பை நாம் கவனிப்பதில்லை. அப்பாக்களும் அப்படித்தான், ஒவ்வொரு குடும்பத்தின் வேர்கள் அவர்கள். நாம் மகன்களாக இருக்கும்போது அது புரியாது, நாம் அப்பாவாக மாறும்போதுதான் அது புரியும். கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், கடவுளை நம்மால் பார்க்க முடியாது, அப்பாவை நேரில் பார்க்க முடியும்" என எமோஷனலாகப் பேசியிருந்தார் விஜய்.
அரசியலுக்கு வந்த பிறகும் கூட விஜய் தனது பெற்றோரை மறக்கவில்லை. கட்சியின் முதல் பொதுக்கூட்டத்தில் தனது பெற்றோரிடம் ஆசி பெற்றார். தேர்தல் முடிவுகள் வெளியான உடன் கூட விஜய் நேராக அடையாறு சென்று தனது பெற்றோரை தான் சந்தித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications