10 லட்சம் கோடி கடன் இருப்பது இப்போ தான் தெரியுதா? அடங்க முடியாத வெறியில் இருக்கிறேன்.. சீமான்
சென்னை: மறைமலைநகரில் நடைபெற்ற தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக விமர்சித்ததுடன், 2029 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்தார். இதேபோன்று தவெகவையும் கடுமையாக விமர்சித்தார்.
10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரியாமல் தான் ஆட்சிக்கு வந்தீர்களா.. நான் தான் பாட்டாகவே பாடினேனே.. இப்போது தான் அவருக்கு இது தெரிந்து இருக்கிறது என விஜய்யை விமர்சித்து பேசினார். மறைமலைநகர் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் துரோக கட்சி
"காங்கிரஸ் எவ்வளவு பெரிய துரோகக் கட்சி என்பது இப்போதுதான் திமுகவிற்கு தெரியும். ராகுல் காந்தி, ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏறாமல் அவமதித்தார். ஆனால் பதவியேற்புக்கு பக்கத்தில் இருந்து பல்லிளித்துக்கொண்டிருக்கிறார். 5 சீட்டும் அற்ப சீட்டு. பதவியேற்கும் போது தீய சக்தி எல்லாம் தூய சக்தி ஆகிவிட்டது. திமுக ஆகாது..
ஆனால் திமுகவால் ஓட்டு வாங்கி ஜெயித்த எம்.எல்.ஏ ஆகும். இந்த தோல்வியும் அவமானமும் திமுகவிற்கு நிகழ்ந்தது எனக்கு மகிழ்ச்சி. போதிக்கும் போது புரியாது; பாதிக்கும் போதுதான் புரியும். 'வலியோடு நிற்கிறேன்' என்று சொன்னவர் எந்த வலி என்று சொல்லவே இல்லை. எந்த உரிமையும் நமக்கு இல்லை. நிலம், வளம் எல்லாம் திருடப்படுகிறது. மறுபடியும் ஸ்டெர்லைட் திறக்க வாய்ப்பு இருக்கிறது. அனில் அகர்வால் நேரடியாக வாழ்த்து சொல்கிறார்.
அடங்க முடியாத வெறியில் இருக்கிறேன்
நான் ஆட்சியில் இருந்து ஒன்றும் தோற்கடிக்கப்படவில்லை. தோற்றுத்தானே நின்றோம். முட்டையில் ஆரம்பித்தோம். 18, 30, 36 ஆனோம். இப்போது 20 ஆகியிருக்கிறோம். நாளைக்கு ஒரு கோடியே 80 ஆகிறோம். என்ன கெட்டுப்போகிறது? நீங்கள் என்னை தேடுவீர்கள். கொஞ்ச நாள் விட்டு என்னை சமாளிக்க கஷ்டப்படுவீர்கள். ஏனென்றால் நான் அடங்க முடியாத வெறியில் இருக்கிறேன்.
இதுவரை நடந்ததை, கடந்ததை, அழித்துவிடுங்கள். இன்று புதிதாக பிறக்கிறோம். 'நாம் தமிழர் அரசியல் கட்சி' என்ற புரட்சிப் படை இந்த நொடியிலிருந்து தொடங்கப்படுகிறது என்ற புதிய உற்சாகத்தை அடையுங்கள். எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். சுடுகாட்டில் நின்று பேசியிருந்தால் கூட 10 பிணங்களை எழுப்பியிருக்கலாம். இந்த இனத்திற்கு முன்னால் 15 ஆண்டுகளாக நான் பேசியதை..
2029 நாடாளுமன்ற தேர்தல்
நான் 100 மீட்டர், 200 மீட்டர் ஓடவில்லை. டக்குன்னு வந்ததும் கப்பை தட்டிக்கொண்டு போவது இல்லை. இது 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம். கடைசி சுற்று வந்துவிட்டோம். நான் மறுபடியும் சொல்கிறேன். இந்த களமும் காலமும் நமது கையிலே நமக்காக காத்திருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் இருக்கிறது.
2029 நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது. 2031 தேர்தல் உள்ளது. உறுதியாக இருப்போம். 2029 தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம். இழந்த வாக்குகளை திரும்ப பெற்று பன்மடங்கு உயர்த்தி, 'அடுத்து நாங்கதான்' என்ற நிலைப்பாட்டை இந்த மண்ணில் விதைக்கிறோம்.
10 லட்சம் கோடி கடன் தெரியாமலா..
கவலைப்பட வேண்டாம். மக்கள் நம்மை விட்டு எங்கும் போக முடியாது. எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெல்லியதாக இருக்கும். தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பினும் கடினமானதாக இருக்கும். அதனால் என்ன செய்வது என்று யோசித்து முடிவு எடுப்பதற்குள் 5 வருடம் ஓடிப்போய்விடும். அதனால், அதைப்பற்றி கவலைப்படாமல் இருங்கள். நான் சொல்வதை மட்டும் கேட்டுவிடுங்கள்..
10 லட்சம் கோடி கடன் இருப்பது தெரியாமல் தான் ஆட்சிக்கு வந்தீர்களா.. நான் தான் பாட்டாகவே பாடினேனே.. இப்போது தான் அவருக்கு இது தெரிந்து இருக்கிறது. கடன் 10 லட்சம் கோடி இருக்கிறது.. இலவசங்களை கொடுக்க முடியாது என சொல்லியிருந்தேன். இப்போது வந்து கடன் இருக்கிறது என சொல்கிறீர்கள்..
6 சிலிண்டர் எப்படி கொடுப்பீங்க
நல்ல வேலை என்னை தோற்கடிச்சி உள்ள வர விடாமல் விட்டுட்டீங்க.. நான் மட்டும் உள்ளே போயிருந்தேன்.. அவ்வளவு பேரும் வெளியேதான் இருந்து இருக்கனும். நல்ல வேலையா தப்பிச்சிட்டீங்க.. என் மேல பாவம் பார்த்தாங்களா.. இல்லை உங்க மேல பாவம் பார்த்து போட்டாய்ங்களா ஒன்னும் தெரியல..
கொடுக்க முடியாது என்று தெரிந்தும் வெற்று வாக்குறுதிகளை கொடுப்பதுதான் மக்கள் விரோதம். துரோகம். நான் உண்மையை சொன்னேன். தர மாட்டேன். கொடுக்க மாட்டேன்னு என்று சொன்னேன். காசு இல்லை என்று கூட தெரியாமல் ஏன் வந்தீங்க.. அந்த 6 சிலிண்டர் எப்படி தர்றீங்கனு பாக்குறேன்" என்றார்.














Click it and Unblock the Notifications