குமரியை விட்டு சென்னைக்கு மாறும் விஜயதரணி.. தவெகவில் லோக்சபா சீட்டுக்காக இப்போதே தொடங்கிய முயற்சி!
சென்னை: அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி கன்னியாகுமரி மாவட்ட அரசியலில் இருந்து விலகி, இனி சென்னையில் அரசியல் செய்ய காய் நகர்த்தி வருவதாக தகவல் தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தலில் சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட விஜயதரணி முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் தவெக அடைந்த வெற்றிக்கு பின், அக்கட்சியை நோக்கி ஏராளமானோர் நகர்ந்து வருகின்றனர். இருந்தாலும் இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தவெக வெல்லவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்ததோடு, கன்னியாகுமரி மாவட்ட அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளையும் தவெகவில் இணைத்து வருகிறது.

அந்த வகையில் விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி 2 வாரங்களுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி, 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்தார். ஆனாலும் அவருக்கு தேர்தலில் போட்டியிடவோ, கட்சிப் பொறுப்போ கொடுக்கப்படவில்லை.
2 ஆண்டுகளாக கட்சிப் பொறுப்பின்றி பயணித்த அவருக்கு சட்டசபைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை. கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே விஜயதரணியின் பெயர் கிண்டலுக்கு உள்ளானது. இதனை உணர்ந்த விஜயதரணி உடனடியாக பாஜகவில் இருந்து விலகி, தவெகவில் ஐக்கியமானார்.
இந்த நிலையில் விஜயதரணியின் அடுத்தக் கட்ட பிளான் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இனி கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னால் அரசியலில் வெற்றி பெற முடியாது என்ற முடிவுக்கு விஜயதரணி வந்துள்ளார். இதனால் லோக்சபா தேர்தலின் போது சென்னையில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
இதற்காக ஆதவ் அர்ஜுனா மூலமாக இப்போதே விஜயதரணி காய் நகர்த்த தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே விஜயதரணி எம்பியாகிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். எம்பி சீட் கேட்டு தான் பாஜகவுக்கும் சென்றார். ஆனால் இரு கட்சிகளிலும் விஜயதரணி வைத்த கோரிக்கை எடுபடவில்லை. இதனால் தவெக பக்கம் சாய்ந்து காய் நகர்த்த தொடங்கியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தவெகவுக்கு மிகப்பெரிய ஆதரவு அலை வீசி வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் எந்த ரிஸ்கும் எடுக்க தேவையில்லை என்று விஜயதரணி கருதுகிறார். விஜயதரணியின் திட்டம் தவெக தலைமையால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications