தட்டி தூக்கும் திமுக! அந்த பேச்சு பேசுன துரை வைகோ.. இப்போ மதிமுக நிலைமையை பாருங்க!
சென்னை: திமுக சின்னத்தில் கட்டாயப்படுத்திதான் போட்டியிட வைத்தார்கள் என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம் என்றும் துரை வைகோ பேசியிருந்தார். இப்படி இருக்கையில், தற்போது மதிமுகவின் 2 எம்எல்ஏக்களும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பு வரை திமுகவுடன் நெருக்கமாக இருந்த கட்சிகள் தற்போது தவெக பக்கம் சாய்ந்திருக்கின்றன. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் கழன்றுக்கொண்ட நிலையில், இன்னும் மதிமுக மட்டும் திமுகவுடன் இருக்கிறது.

துரை வைகோ விமர்சனம்
மதிமுகவை தவிர மற்ற கட்சிகள் தங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட்டிருந்தன. ஆனால், மதிமுக வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தார்கள். எனவே தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியாமல் கட்சி தலைமை திணறியது. இது ஒருபுறம் இருக்க.. மறுபுறம் திமுக சின்னத்தில் போட்டியிட்டது குறித்து சரமாரியான விமர்சனங்களை துரை வைகோ அடுக்கியிருந்தார்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நாங்கள் கடைசி நேரத்தில் கட்டாயப்படுத்தப்பட்டோம்.. இப்படி போட்டியிட்டது துர்திஷ்டம்தான் என்று உறுதியாக பேசியிருந்தார் துரை வைகோ.
வைகோவின் ஆதங்கம்
அதேபோல, வைகோ இந்த விஷயத்தில்.. "சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் நாங்கள் திமுக கூட்டணியில் 9 ஆண்டுகளாக பயணித்தோம். ஆனால், பாஜக உடன் கூட்டணி வைத்து, அதிமுகவை அமைச்சரவையில் அமர்த்த முயற்சித்தார்கள்" என்று திமுகவை விமர்சித்திருந்தார். பொது வெளியில் ஆயிரம் பேசலாம்.. ஆனால் கட்சியின் நிலைபாடு என்ன என்பது பொதுக்குழுவில்தான் தீர்மானமாகும். அந்த வகையில், யாருக்கு ஆதரவு? என்பது குறித்து முடிவெடுக்க நேற்று மதிமுக உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது.
திமுகவில் இணையும் எம்எல்ஏ
அந்த கூட்டத்தில், கட்சியின் 2 எம்எல்ஏக்களில் ஒருவர்தான் பங்கெடுத்திருந்தார். இன்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்த ஒரு எம்எல்ஏவும் பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, விரைவில் 2 எம்எல்ஏக்களும் திமுகவில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வைகோவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்டணி முறிவு
கூட்டணி என்பதும் கூட்டணி முறிவு என்பதும் அரசியலில் சாதாரணம்தான். நாளைக்கே நிலைமை மாறுகிறது.. திமுக பழைய ஃபார்முக்கு திரும்புகிறது எனில், அக்கட்சியுடன் கூட்டணி வைக்க மதச்சார்பற்ற கட்சிகள் முயற்சிக்கும். அப்படி இருக்கும்போது, வைகோ எடுத்த எடுப்பில் திமுகவுடனான உறவை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது சரியில்லை என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications