இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு? 26 தொகுதிகளில் எலெக்ஷன்! ஆனாலும் தப்பிக்கும் தவெக!
சென்னை: இன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடாவை மீறி, 25 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே அவர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
சட்டமன்றத்தை பொறுத்தவரை, கொறடா உத்தரவுதான் எல்லாம். அவர் சொன்னதை மீறி வாக்களித்தால் அந்த எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும். எனவே எஸ்.பி.வேலுமணி தலைமையில் விஜய்க்கு வாக்களித்த 25 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும், இதனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் விரைவில் நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த பிரச்சனையிலிருந்து தவெக தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.

என்ன நடந்தது?
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 எம்எல்ஏக்களை தக்க வைத்துக்கொண்டது. அதேபோல தவெக இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் எழுந்தது. காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை நிரூபித்துவிடும். இருப்பினும், சில நெருக்கடிகள் இருந்தன.
தவெகவின் பலம்
முதல் நெருக்கடி, விஜய் வெற்றி பெற்றி இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்துவிட்டார். எனவே, 108 என்கிற பலம் 107 ஆக குறைந்தது. அதேபோல, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது இரண்டாவது நெருக்கடி. எனவே தவெக பலம் 106 ஆக குறைந்தது.
- தவெக - 106
- காங்கிரஸ் - 5
- சிபிஎம் - 2
- சிபிஐ - 2
- ஐயுஎம்எல் - 2
- விசிக - 2
எல்லாம் சேர்த்தால் 119 என வருகிறது. பெரும்பான்மைக்கு 118 போதும். அந்த வகையில் பெரும்பான்மையை விட 1 எம்எல்ஏவின் ஆதரவை கட்சி அதிகமாக பெற்றிருக்கிறது.
அதிமுக பிளவு
இப்படி இருக்கையில்தான் நேற்று எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், விஜய்யை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்த சந்திப்பு அதிமுக 2 அணியாக உடைந்திருந்தனை உறுதி செய்தது. இதே நிலை நீடித்தால் கட்சிக்கு கட்டுப்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அதிமுக தலைமை எச்சரித்தது.
வேலுமணி டீம் காலி
இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி, இன்று சட்டமன்றத்தில் விஜய்க்கு 25 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இது அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வழிவகுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையால் இவர்களின் எம்எல்ஏ பதவி உடனே பறிபோகும். ஏனெனில், சட்டப்படி 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் கட்சி மாறினால்தான் நடவடிக்கை எடுக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை மொத்தம் 47 எம்எல்ஏக்கள். இதில் 3ல் 2 பங்கு எனில், 32 எம்எல்ஏக்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி டீமில் 25 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள்.
எனவே நிச்சயம் இவர்கள் மீது அதிமுக கொறடா நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி எடுத்தால் 25 தொகுதிகள், அத்துடன் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி என 26 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும்.
சபாநாயகர் பலம்
இருப்பினும் இந்த விஷயத்திலிருந்து தவெக எளிதாக தப்பிக்கலாம். அதாவது என்னதான் அதிமுக கொறடா, 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட்டாலும், இறுதி முடிவை சபாநாயகர்தான் எடுக்க முடியும். சபாநாயகர் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்பார். அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்குள் தகுதி நீக்க முடிவை எடுக்க வேண்டும் சபாநாயகரை நெருக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் சபாநாயகர் தவெகவுக்கு ஆதரவாகத்தான் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications