விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி வந்தது காமராஜ்தான்! தவெகவின் இன்னொரு ஆதாரத்தை டேமேஜ் செய்த தினகரன்
சென்னை: விஜய் வீட்டுக்கு முகத்தை மூடிக் கொண்டு வந்ததே அமமுக எம்எல்ஏ காமராஜ்தான் என ஆதாரங்களை தவெகவினர் காட்டி வருகிறார்கள். குதிரை பேரத்தில் தவெக தலைவர் விஜய் ஈடுபடுவதாக வெளியான தகவலுக்கு தவெகவினர் சோசியல் மீடியாவில் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மாஸ் காட்டிய அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டார் டிடிவி தினகரன்.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தொடர்பான விவகாரம், தமிழக அரசியலில் ஒரு திரில்லர் திரைப்படத்தைப் போல அடுத்தடுத்து திருப்பங்களை சந்தித்து வருகிறது. இச்சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டபோது, அமமுக எம்எல்ஏ காமராஜ், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதாகத் தகவல்கள் பரவின. காமராஜின் கையெழுத்து மற்றும் அமமுகவின் லெட்டர் பேட் அந்தக் கடிதத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது, இதுவே சர்ச்சையைத் தொடக்கி வைத்தது.

இந்தச் செய்தி வெளியானதும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாகக் களமிறங்கிய அவர், மே 8 அன்று இரவு காவல் துறையில் புகார் பதிவு செய்தார். அதில், தமிழக வெற்றி கழகம் ஆவண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டினார்.
காமராஜின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு ஆளுநர் மாளிகையைத் தவறாக வழிநடத்த தவெக முயற்சிப்பதாக தினகரன் தெரிவித்தார். காமராஜ் கடத்தப்பட்டு கையெழுத்து வாங்கப்பட்டாரா, அல்லது தொழில்நுட்பத்தால் போலி ஆவணம் தயாரிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கக் கோரினார். இது அமமுகவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அரசியல் சதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

சில மணிநேரங்கள் தலைமறைவாக இருந்த காமராஜ், பின்னர் ஆளுநரைச் சந்தித்து விளக்கமளித்தார். செய்தியாளர்களிடம் அவர், "நான் ஒருபோதும் விஜய்யின் கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனது விசுவாசம் எப்போதும் அதிமுக - அமமுக கூட்டணிக்குத் தான்," என்று உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், "அந்தக் கடிதத்தில் இருப்பது எனது கையெழுத்தே அல்ல. தமிழக வெற்றி கழகத்தினர் திட்டமிட்டு பொய்களைப் பரப்புகின்றனர்," என அவர் திட்டவட்டமாக மறுத்து, தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் விஜய் வீட்டிற்கு சென்ற ஒரு காரில் முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவர் சென்றதாகவும் அவர் யார் என தெரியவில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அவர்தான் காமராஜ் என தவெகவினர் ஆதாரம் என கூறி ஒரு புகைப்படத்தில் இரு வித்தியாசங்களை குறியீடாக காட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் காட்டிய ஆதாரத்தில் காமராஜ் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது கையில் சிவப்பு நிற கயிறும், கோல்ட் பிளேட்ட் வாட்சும் அணிந்திருக்கிறார். ஆனால் இன்று தினகரனுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் காமராஜ் எம்எல்ஏ பச்சை நிற கயிறையும், எவர் சில்வர் நிற வாட்சையும் அணிந்திருந்தார். எனவே தவெகவினரின் இந்த ஆதாரமும் தவறு என்றாகிவிட்டது. மேலும் டிடிவி தினகரனிடம், காரில் வெளியான வீடியோவிலும் தற்போது நேரிலும் ஒரே கயிறு, வாட்ச் இருக்கிறதே என செய்தியாளர் கேட்டதற்கு தினகரன், "இந்த கயிறை அவர் நீண்டகாலமாக அணிந்திருக்கிறார். அசல் போல் ஒரு போலி ஏஐ வீடியோவை உருவாக்கலாமே" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications