பாஸ் ஆன விஜய்.. மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவை பெற்றது தவெக அரசு! நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
சென்னை: தமிழக அரசியலில் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள முக்கிய நிகழ்வாகவும், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சோதனையாக இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு பார்க்கப்பட்டது. தேர்தலில் அதிக இடங்களை வென்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, இன்று சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட் கட்சி ஆதரவுடன் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை எட்ட முடியாததால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. அந்த ஆதரவின் அடிப்படையில்தான் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆனால் பதவியேற்ற சில நாட்களிலேயே அரசுக்கு சிக்கல்கள் தொடங்கின. முதலில், முதலமைச்சராக பொறுப்பேற்றதால் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தவெக உறுப்பினர் எண்ணிக்கை ஒரு இடம் குறைந்தது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி ஏற்பட்டது.
தவெக அரசு
திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக உறுப்பினர் சீனிவாச சேதுபதி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் முடிவில் முறைகேடு நடந்ததாக திமுக வேட்பாளர் பெரியகருப்பன் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இறுதி முடிவு வரும் வரை சீனிவாச சேதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கக் கூடாது என்று இடைக்கால தடை விதித்தது. இதனால் தவெக பலம் மேலும் குறைந்து விட்டது.
தமிழக சட்டசபை
இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தவெக அரசுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதால், தற்போதைக்கு அரசுக்கு தேவையான எண்ணிக்கை கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அரசியல் களத்தில் தினமும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி
அமமுக ஒரே எம்எல்ஏ காமராஜ் திடீரென தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சட்டசபையிலேயே அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று வரை ஆதரவு கடிதம் போலியானது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தற்போது அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதேநேரம் அதிமுகவிலும் கடும் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணிக்கும், எஸ்.பி. வேலுமணி - சி.வி. சண்முகம் அணிக்கும் இடையே அதிகாரப்போர் தீவிரமடைந்துள்ளது.
முதல்வர் விஜய்
வேலுமணி அணியில் உள்ள பல உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவு தரலாம் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இது உண்மையாக இருந்தால், விஜய் அரசின் பலம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகும். இன்றைய சட்டசபை கூட்டம் காலை தொடங்கியவுடன் முதலில் சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதன் பின்னர் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிவார். அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும். குரல் வாக்கெடுப்பா அல்லது உறுப்பினர்களை தனித்தனியாக எண்ணும் முறையா என்பது சபாநாயகர் முடிவைப் பொறுத்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த நிலையில் இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை கூடியதும் சபாநாயகர் அரசினர் தீர்மானத்தை விஜய் கொண்டு வருவார் என அறிவித்தார். இதனை தொடர்ந்து தனது அரசுக்கு ஆதரவு தருமாறு விஜய் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் மற்றும் எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் விஜய் அரசுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் இந்த கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications