இரட்டைக் கதிரே.. ஒரிஜினல் ’ஜீன்ஸ்’.! ஒரே ஸ்கூல்.. ஒரே மார்க்! திருவாரூரை திகைக்க வைத்த சகோதரிகள்!
சென்னை: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த வீரராகவன் வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர். ஒரே பள்ளியில் படித்து வரும் இருவரும், இருவரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் இருவருகே தலா 414 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓவரூர் மேட்டுத்தெருவில் வசித்து வரும் வீரராகவன் சென்னையில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். குடும்பத்தின் எதிர்கால நலனுக்காக வெளியூரில் வேலை பார்த்து வரும் அவர், தனது மகள்களின் கல்விக்காக தொடர்ந்து ஊக்கம் அளித்து வந்துள்ளார்.

இவரது மனைவி வனிதா ஓவரூரிலேயே குடும்பத்தையும், குழந்தைகளின் படிப்பையும் கவனித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கார்த்திகா மற்றும் கீர்த்திகா என்ற இரட்டை மகள்கள் உள்ளனர். பிறந்த நாள் முதல் பல விஷயங்களில் ஒற்றுமையாக வளர்ந்த இவர்கள், கல்வியிலும் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர்.
இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அன்னை தெரசா அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர். இந்த நிலையில், தமிழக அரசு நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டது. வழக்கம் போல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை பார்த்தனர். ஓவரூரிலும் அதே பரபரப்பு நிலவியது. குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் தேர்வு முடிவை பார்த்த இரட்டை சகோதரிகள் கார்த்திகா மற்றும் கீர்த்திகாவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் காத்திருந்தது.
இருவரும் தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் தலா 414 மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். இரட்டை பிறவிகளான சகோதரிகள் ஒரே பள்ளியில் படித்து, ஒரே தேர்வில் கலந்து கொண்டு, ஒரே மதிப்பெண் பெற்ற சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் ஓவரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வேகமாக பரவிய நிலையில், பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் இரட்டை சகோதரிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி ஆசிரியர்களும் மாணவிகளின் முயற்சியை பாராட்டியதுடன், தொடர்ந்து உயர்கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினர். இரட்டை மகள்களின் இந்த சாதனை குறித்து பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எங்கள் மகள்கள் இருவரும் எப்போதும் சேர்ந்து படிப்பார்கள். ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்து படித்ததே இந்த வெற்றிக்கு காரணம் என்று குடும்பத்தினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர். பிறப்பில் தொடங்கிய ஒற்றுமை, பள்ளி வாழ்க்கையிலும் தொடர்ந்த நிலையில், தற்போது தேர்வு மதிப்பெண்களிலும் அதே ஒற்றுமையை வெளிப்படுத்திய கார்த்திகா, கீர்த்திகா சகோதரிகள் ஓவரூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.














Click it and Unblock the Notifications