அமைச்சராக்கும் முன்பே தவெகவினரிடம் சத்தியம் வாங்கிய முதல்வர் விஜய்.. என்ன காரணம்? உடைந்த மேட்டர்
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாகி உள்ளனர். இந்நிலையில் தான் முதல்வர் விஜய் அமைச்சர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனை வனத்துறை அமைச்சரான காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார் உறுதி செய்துள்ளார். விஜய் வாங்கிய இந்த சத்தியத்தின் பின்னணி பற்றிய விவரம் வருமாறு:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகவும், பிற 9 எம்எல்ஏக்கள் கடந்த 10ம் தேதி அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அதன்பிறகு இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. தவெகவின் 21 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில் தான் தவெகவினர் அனைவரிடமும் ஊழல் செய்யக்கூடாது. மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் தொடக்கூடாது என சத்தியம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தவெக தரப்பு உறுதி செய்துள்ளது.
சத்தியம் வாங்கிய விஜய்
அதாவது இன்று புதிதாக பதவியேற்ற 23 பேரில் ஒருவர் தான் ன் காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ ரஞ்சித் குமார். இவருக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர் தான் விஜய் சத்தியம் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சராக பதவியேற்புக்கு பிறகு அமைச்சர் ரஞ்சித் குமார் கூறியதாவது:
எம்ஜிஆர்-ருக்கு நிகராக விஜய்
''இன்று மிகவும் மகிழ்ச்சியான தினமாக நினைக்கிறேன். 1977 ல் எம்ஜிஆர் ஆட்சி அமைத்தது போல் விஜய் 2026ல் ஆட்சியமைத்துள்ளார். எம்ஜிஆருக்கு நிகராக மக்கள் விஜய்யை பார்க்கிறார்கள். ஊழல் இல்லாத நல்லாச்சி கொடுக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்.
இதுவரை ஆண்ட திமுக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ஐந்தரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளனர். அதற்கு முன்பாக அதிமுக நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. இரண்டு கட்சிகளுக்கும் நிர்வாக திறமை இல்லை. கடன் வாங்கி அரசு நடத்துவது ஒரு நல்ல அரசா? ஒவ்வொரு மக்கள் மீதும் கிட்டத்தட்ட 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. ஊழல் இல்லாத நல்லாட்சி வர வேண்டும் என்பதற்காக மக்கள் விஜய் ஆட்சியை தேர்வு செய்துள்ளனர்.
சத்தியம் வாங்கியது ஏன்?
நிச்சயமாக தற்போதைய நிலை மாறும். மக்கள் வாழ்வாதாரம் முன்னேறும். தமிழகம் முன்னேற்ற பாதைக்கு வரும். கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விஜய்க்கு உண்மையான விசுவாசமாக இருப்போம். மக்களுக்கும் விசுவாசமாக இருப்போம்.
எந்த நிலையிலும் டெண்டரில் கமிஷன் வாங்க கூடாது என்று விஜய் சத்தியம் வாங்கி உள்ளார். முதலமைச்சர் எல்லா வேட்பாளர்களிடம் சத்தியம் வாங்கி உள்ளார். மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட தொடக்கூடாது என்று சத்தியம் வாங்கி இருக்கிறார். ஊழல் செய்யக்கூடாது என்று சத்திய பிரமாணம் வாங்கி உள்ளார். அவருடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு உண்மையாக இருப்போம்'' என்றார்.












Click it and Unblock the Notifications