வந்தவாசி ஹார்டுவேர்ஸ் கடைக்கு வந்த ராஜஸ்தான் மூதாட்டி! குங்குமமான பூ! பெண் சாமியார் செய்தது என்ன?
வந்தவாசி: வந்தவாசியில் 65 வயது மூதாட்டி ஒருவர் சாமியார் வேடத்தில் அங்கிருந்த ஹார்டுவேர் கடையில் 85 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸார் தேடி வந்த நிலையில் அவர் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டார் என சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபால்சிங். இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடையில் மேலும் இரு ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த வியாழக்கிழமை மாலை அவரது கடைக்கு ராஜஸ்தானில் இருந்து 65 வயது மூதாட்டி ஒருவர் வந்தாராம்.
அப்போது சாமியார் வேடத்தில் இருந்ததால் அந்த மூதாட்டியை ஸ்ரீபால்சிங் வரவேற்று உட்கார வைத்தாராம். இருவரும் ஒரே மாநிலத்தவர்கள் என்பதால் மூதாட்டியிடம் பால்சிங் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது அந்த மூதாட்டி குடிக்கத் தண்ணீர் கேட்டாராம்.
தண்ணீர் கொடுத்ததும், தனக்கு டீ வேண்டும் என கேட்டதும் பால்சிங், பணியாளர் ஒருவரை அனுப்பி டீ வாங்கி வரச் சொன்னாராம். டீ வாங்கி வரும் கேப்பில் அந்த மூதாட்டி கடையை சுற்றி சுற்றி பார்த்தாராம்.
அப்போது அங்கு ஒரு சுவாமி போட்டோவில் இருந்த பூவை எடுக்கச் சொல்லி , அதை கையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி ஏதோ மந்திரம் சொன்னாராம். அப்போது அதிர்ச்சி, கையில் இருந்த பூ, குங்குமமாக மாறிவிட்டதாம். உடனே அந்த குங்குமத்தை எடுத்து பால்சிங், ஊழியர்களின் நெற்றியில் வைத்தாராம்.

இதையடுத்து தன்னை பேருந்து நிலையத்தில் விட்டுவிடுமாறும் அந்த மூதாட்டி கூறியதை அடுத்து கடை ஊழியர் ஒருவர் அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு வந்தாராம்.
பின்னர் பால்சிங் ஏதேச்சையாக கல்லாவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 85 ஆயிரம் ரூபாயை காணவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த பால்சிங், சிசிடிவி கேமராவில் பார்த்தாராம்.
அப்போது அந்த சாமியார் நெற்றியில் குங்குமமிட்ட பிறகு, அவர் சொல்வதையெல்லாம் தலையாட்டி பொம்மை போல் கேட்டு கடை உரிமையாளர் பால்சிங் முன்பே ஊழியர்கள் கல்லாவில் இருந்து 85 ஆயிரம் பணத்தை எடுத்து கொடுத்தனராம். இந்த காட்சிகள் தெளிவாக இருந்ததை அடுத்து, தான் மூதாட்டியிடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம்.

அவருடைய புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிழைப்புத் தேடி வந்தவர்களை மட்டும் குறி வைத்து இது போன்ற நூதன மோசடிகளை செய்து வருவது தெரியவந்தது.
மேலும் அந்த மூதாட்டியை கடை ஊழியர் எங்கு கொண்டு போய்விட்டார் என்பதையும் போலீஸார் விசாரித்துள்ளனராம். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறார்கள். வேறு ஏதேனும் கடைகளில் மூதாட்டி கைவரிசை காட்டியிருப்பாரோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் அந்த மூதாட்டி திருவண்ணாமலையில் பிடிபட்டதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications