காங்கிரஸ் கட்சிக்கு 2, எஸ்பி வேலுமணி தரப்புக்கு 5.. அடுத்த 3 நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்?
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் மற்றும் அதிமுக சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவையும், அதிமுகவின் எஸ்பி வேலுமணி தரப்புக்கு 5 அமைச்சரவையும் ஒதுக்க விஜய் முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக முதல்வராக விஜய் மே 10ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தவெக சார்பாக 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். சுமார் ஒரு வாரமாக அவர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இன்று தவெகவின் 9 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி, நீர்வளம், கணிமவளம், பொதுப்பணி, சுகாதாரம், பள்ளிக்கல்வி, தொழில்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் முக்கிய துறைகளான பத்திரப்பதிவு, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, வீட்டுவசதி, உயர்கல்வி, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் அடுத்த சில நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. அதற்கான பணிகளை முதல்வர் விஜய் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே அமைச்சரவை விரிவாக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சரவை கொடுக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் 2 அமைச்சரவை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப் போவதாக கூறி இருந்தார். அதேபோல் அதிமுகவில் எஸ்பி வேலுமணி தரப்புக்கு 5 அமைச்சரவை ஒதுக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நம்பிக்கை தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு அதிமுக தரப்பில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, தவெகவுக்கு ஆதரவாக இருக்கும் 28 மாவட்டச் செயலாளர்களையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் எஸ்பி வேலுமணி தரப்பில் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கேசி வீரமணியும் அதிமுக தரப்புக்கு தவெக அமைச்சரவை கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை உறுதி செய்திருக்கிறார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது அதில் அதிமுகவும் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications