சிறுமியிடம் சில்மிஷம்! போக்சோ வழக்கில் வசமாக சிக்கிய மத்திய அமைச்சரின் மகன்! வேறு வழியின்றி சரண்!
ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இணை அமைச்சராக தெலங்கானாவை சேர்ந்த பண்டி சஞ்சய் குமார் இருக்கிறார். இவரது மகன் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் சிக்கியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுமிக்கும் சஞ்சய் குமார் மகனான பகீரத்துக்கும் இடையில் கடந்த 2025ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் தொடங்கியிருக்கிறது. சிறுமிக்கு 18 வயதான பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியை பகீரத் பாலியல் சீண்டல் செய்திருக்கிறார்.

போலீசில் சரண்
இந்த விகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் தற்போது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பகீரத் எங்கும் தப்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல, கைது நடவடிக்கையிலிருந்து அவருக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது. இதனையடுத்து தற்போது பகீரத் சரணடைந்திருக்கிறார்.
விளக்கம் கொடுத்த அமைச்சர்
இது குறித்து மத்திய இணையமைச்சர் சஞ்சய் கூறுகையில், "என் மகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சட்டத்தின் மீது கொண்ட மரியாதை காரணமாக, காவல்துறை விசாரணைக்காக பகீரத் வழக்கறிஞர்கள் மூலம் விசாரணைக்கு சரணடைந்திருக்கிறார். சட்டத்தின் முன் அனைவரும் சமம், அது தன் மகனாக இருந்தாலும் சரி, ஒரு சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி. அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
வழக்கறிஞர்களின் அட்வைஸ்
மேலும், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தனது மகன் தொடர்ந்து கூறி வருவதாக பண்டி சஞ்சய் குமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட உடனேயே மகனை காவல்துறையிடம் ஒப்படைக்க நினைத்ததாகவும், வழக்கறிஞர்களுடன் கலந்துபேசி, ஆதாரங்களை சமர்ப்பித்தபோது, வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஜாமீன் நிச்சயம் கிடைக்கும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஜாமீன் வாய்ப்பு
தற்போதும்கூட ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் நம்புவதாகவும், ஆனாலும், இந்த விவகாரத்தை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கருதி, தானே மகனை அழைத்து வந்து, வழக்கறிஞர்கள் மூலம் விசாரணைக்காக ஒப்படைத்ததாகவும் அமைச்சர் விளக்கினார். நீதித்துறையின் மீது தமக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திங்கட்கிழமை நீதிமன்ற உத்தரவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நீதி அமைப்பின் மீதுள்ள மரியாதை காரணமாகவும், மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் மகனை விசாரணைக்கு அனுப்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொய் புகார்
போக்சோ புகாருக்கு எதிராக, சிறுமியின் குடும்பத்தினர் மீது அமைச்சரின் மகன் பகீரத் தரப்பில் எதிர் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடன் நட்பாக பழகிவிட்டு திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று சிறுமி வற்புறுத்தியதாகவும், மறுத்தபோது சிறுமியின் பெற்றோர் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்காவிட்டால் தமக்கு எதிராகப் பொய் புகார்களைப் பதிவு செய்வதாக அச்சுறுத்தினர் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போக்சோ வழக்கு
இந்த மிரட்டலுக்கு பயந்து, சிறுமியின் தந்தைக்கு ₹50,000 அளித்ததாகவும், ஆனால் பின்னர் குடும்பத்தினர் ₹5 கோடி கேட்டதாகவும் பகீரத் கூறினார். பணம் கிடைக்காவிட்டால் சிறுமி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்சோ வழக்கில் மத்திய அமைச்சரின் மகன் ஒருவர் சிக்கியிருக்கும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications