மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. ரூ.10 வரை உயர்கிறது பெட்ரோல், டீசல் விலை? எச்சரிக்கும் நிபுணர்கள்!
டெல்லி: இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏற்கனவே அவதிப்பட்டு வரும் சாமானிய மக்களுக்குகு மேலும் ஒரு பேரிடியாக, வரும் வாரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'எம்கே குளோபல்' கணிப்பின்படி, எரிபொருள் விலைகள் லிட்டருக்கு ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் மற்றும் மேற்கு ஆசியாவில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவது தான் இந்த விலை உயர்வு அபாயத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த வாரம் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தின. மத்திய அரசு கடந்த மார்ச் 27 அன்று எரிபொருள் இறக்குமதி மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைத்த போதும் கூட, சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பதால், உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, உள்நாட்டு சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.17 முதல் ரூ.18 வரை நஷ்டம் ஏற்படுவதாகத் தொழில்துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை இதே நிலையில் நீடித்தால், நடப்பு காலாண்டில் மட்டும் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.57,000 கோடி முதல் ரூ.58,000 கோடி வரை நஷ்டம் ஏற்படலாம்.
இந்த நஷ்டத்தைச் ஈடுகட்ட, அடுத்த 2 முதல் 3 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலையை ஒரேடியாகவோ அல்லது படிப்படியாகவோ லிட்டருக்கு ரூ.10 வரை நிறுவனங்கள் உயர்த்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு எரிபொருளோடு மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியாவின் முன்னணி பால் நிறுவனங்களான அமுல் மற்றும் மதர் டெய்ரி ஆகியவையும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன.
கடந்த 13 மாதங்களில் இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்துவது இது இரண்டாவது முறையாகும். பிராந்திய பால் நிறுவனங்களும் விரைவில் இந்த விலை உயர்வைப் பின்பற்றக்கூடும் என்பதால், பொதுமக்களின் மாதாந்திர குடும்பச் செலவு மேலும் அதிகரிக்கும். எரிபொருள் விலை உயர்வு ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கத்தையும் தூண்டும் என்று 'இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச்' நிறுவனத்தின் இயக்குநர் மேகா அரோரா எச்சரித்துள்ளார்.
பெட்ரோல், டீசல், பால் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வால் வரும் மாதங்களில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 0.42% வரை அதிகரிக்கக்கூடும். டீசல் விலை உயர்ந்தால் லாரிகளின் வாடகை அதிகரிக்கும். இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாடு முழுவதும் கிடுகிடுவென உயரும். மேலும், ஆட்டோ, ஓலா, உபெர் போன்ற ஆப்-அடிப்படையிலான கார் சேவைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிக்கும்.
டிராக்டர்கள் மற்றும் நீர் பாசன பம்புகளுக்கு டீசலையே நம்பியிருக்கும் விவசாயிகளும் இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாவார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு 10 டாலர் அதிகரிக்கும் போதும், அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிப்பதோடு பணவீக்கத்தையும் துரிதப்படுத்தும் என்று பொருளாதார அறிஞர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி நாட்டின் பணவீக்க விகிதம் 4.6%-லிருந்து 5% ஆக உயரக்கூடும் என்று தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.












Click it and Unblock the Notifications