90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ்
டெல்லி: மேற்கு வங்கத்தை சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்த மம்தா இப்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார். சொந்தக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் ஆபத்தை மம்தா எதிர்கொண்டுள்ள சூழலில், மம்தா தனது கட்சியைக் காங்கிரஸுடன் இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறாராம். அடுத்தடுத்து இரு நாட்களில் இரு முக்கிய சந்திப்புகள் நடந்துள்ள நிலையில், காங்கிரஸ் வட்டாரங்கள் சில முக்கியமான கருத்துகளைக் கூறியுள்ளன.
இந்திய அரசியலில் குறிப்பாக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே மம்தாவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல கசப்புணர்வுகள் இருந்தன. ஆனால், இப்போது தனது சொந்த திரிணாமுல் கட்சியே கையைவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மம்தா பானர்ஜி முக்கிய முடிவை எடுக்கப் போகிறார். அதாவது காங்கிரஸுடன் திரிணாமுல் கட்சியை இணைப்பது குறித்து யோசித்து வருகிறாராம்.

90 நிமிடங்கள் நடந்த சந்திப்பு
இன்று புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள 10 ஜன்பத் இல்லத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியை வலுப்படுத்துவதும், நாடாளுமன்றத்தில் பாஜகவைக் கூட்டாக எதிர்கொள்வதும் தான் இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம். ராகுல் காந்தியின் தலைமையைத் திரிணாமுல் காங்கிரஸ் ஏற்றுக்கொள்வதாகவும், வலுவான கூட்டணி அமைய விரும்புவதாகவும் இந்தச் சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா- சோனியா
அபிஷேக் பானர்ஜி சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாக, நேற்றைய தினம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகின. இது இரு தரப்பும் நெருக்கமாகி வருவதையே காட்டுகிறது.
1997ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றே மம்தா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். இந்தச் சூழலில் தான் மீண்டும் தாய் கட்சியுடன் இணைவது தொடர்பாக மம்தா யோசித்து வருகிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் காங்கிரஸ் தரப்பில் இருந்து சில கருத்துகள் வந்துள்ளன.
டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள்
இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கட்சிகளை இணைப்பது தொடர்பான எந்தவொரு முன்மொழிவும் திரிணாமுல் காங்கிரஸிடமிருந்து தான் வரவேண்டும். காங்கிரஸ் கட்சி அத்தகைய ஒரு நகர்வை வலுக்கட்டாயமாக முன்னெடுக்கவில்லை. அதேநேரம் அரசியலில் எதுவும் சாத்தியம். ராகுல் காந்தியின் தலைமையையும் கொள்கையையும் ஏற்றுக்கொள்பவர்களுக்கு எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்" என்று கூறுகிறார்கள்.
திரிணாமுல் காங்கிரஸின் ஏற்பட்டுள்ள உட்கட்சி நெருக்கடியே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த மேற்கு வங்கச் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் தோல்வியைச் சந்தித்து. இதனைத் தொடர்ந்து, அக்கட்சியின் பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பிக்கள் மம்தாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் பா.ஜ.க அல்லது என்.டி.ஏ கூட்டணியில் இணையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸில் இணைவது தொடர்பாக மம்தா யோசித்து வருகிறார்.
கூட்டணி வரலாறு
1998ல் மம்தா பானர்ஜி காங்கிரஸிலிருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸைத் தொடங்கினார். அதன் பிறகு 2011ல் மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆட்சியை வீழ்த்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தன.. இருப்பினும், இந்தக் கூட்டணி ஓராண்டு மட்டுமே நீடித்தது. 2012ல் கருத்து வேறுபாடு காரணமாக இரு கட்சிகளும் பிரிந்தன. முதலில் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இணைந்த போதிலும், பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இதனால் 2024 லோக்சபா தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications