அகமதாபாத்: நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலியாகியும், கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் குவிந்து வருவது தடுக்க முடியவில்லை.. இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு, ஊர் திரும்பும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.. இந்த டெஸ்ட்டில் பலருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி மிகுந்த கவனத்தையும், கலக்கத்தையும் தந்து வருகிறது.. இது வழக்கமாக நடைபெறும் ஒன்று என்றாலும், இந்த முறை தொற்று காரணமாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.. பல லட்சக்கணக்கானோர் ஒன்றாக கூடி, ஒரே நேரத்தில், கங்கையில் நீராடுவார்கள்..
ஆனால் தொற்று வேகமாக பரவி வருகிறது என்று தெரிந்தும், 2வது அலை முதல் அலையைவிட மிக பயங்கரமானது என்று தெரிந்தும், ஆஸ்பத்திரிகளில் மக்கள் சிகிச்சை பெறுவதற்கு பெட்கள் பற்றாக்குறையாக இருக்கிறது என்பது தெரிந்தும்கூட, ஹரித்வார் நகரில் பக்தர்கள் குவிந்து வருவது பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.
மாநில அரசு திணறிவிட்டது.. 3 மாத நிகழ்ச்சிகள், 2 மாதமாக குறைக்கப்பட்டும், கட்டுப்பாடுகள் போடப்பட்டும் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. ஒருத்தரும் விதிகளை கடைப்பிடிக்கவுமில்லை. இறுதியில், நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் கபில் தேவ் தாஸ் தொற்றுக்கு பலியானபிறகுதான் லேசான அச்சம் பக்தர்களிடம் எட்டிப்பார்த்தது. பிறகு ஒவ்வொருவராக திரும்ப ஆரம்பித்தனர்.. ஆனால் அதற்குள் தொற்று பல பக்தர்களிடமும் பரவிவிட்டது. .
கும்பமேளாவில் பங்கேற்றபிறகு, குஜராத் திரும்பிய மொத்தம் 49 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.. நகரின் சபர்மதி ரயில்வே ஸ்டேஷனில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த டெஸ்ட் செய்யப்பட்டது.. மொத்தம் 533 பேரில், 49 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. இவர்கள் உடனடியாக அந்த நகரத்தில் செயல்படும் கோவிட் பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
அதேபோல, சனிக்கிழமை, 313 பேர் ஹரித்வாரில் இருந்து ஒரு ரயிலில் சபர்மதிக்கு வந்தனர்.. அவர்களுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதில், 34 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது.. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை, கும்பமேளாவில் இருந்து திரும்பி வந்த மொத்தம் 220 பேரில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கும்பமேளாவில் கலந்து கொண்டு மாநிலத்திற்குத் திரும்பும் மக்கள் அந்தந்த நகரங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கோவிட் -19 சோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அறிவித்திருந்தார்... அதன்படியே இந்த டெஸ்ட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒருமுறை, உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் பேசும்போது, "ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார் என்று கூறியிருந்தார்... ஆனால், இப்போது ஒட்டுமொத்த மாநிலமே பீதியில் உறைந்து போய் கிடக்கிறது.