போகோடா: கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 104 வயதான மூதாட்டி ஒருவர், கடந்த 9 மாதங்களில் இரு முறை கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாகக் குணமடைந்துள்ளார்.
கொரோனா பாதிப்பு சர்வதேச அளவில் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், வைரஸ் பாதிப்பு என்பது முழுமையாகக் கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், கொலம்பியாவில்104 வயதான மூதாட்டி ஒருவர், கடந்த 9 மாதங்களில் இரு முறை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி கார்மென் ஹெர்னாண்டஸ். இவர் கடந்த 25 ஆண்டுகளாக அங்குள்ள சான் ஜோஸ் நர்சிங் முதியவர்கள் விடுதியில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு முதலில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு முதியவர்கள் விடுதியிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சில வாரச் சிகிச்சையிலேயே அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டார்.
இதையடுத்து கொலம்பியா நாட்டில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து கார்மென் ஹெர்னாண்டஸ் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அவர் சீனா கண்டுபிடித்துள்ள சினோவாக் என்ற தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்நிலையில், அவர் கொரோனா காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
இந்த முறை அவர் சான் ரஃபேல் டி துஞ்சா பல்கலைக்கழக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 21 நாட்கள் சிகிச்சை பெற்றார். அவர் எளிதாகச் சுவாசிக்க வென்டிலேட்டர் உதவி வழங்கப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதைத் தடுக்க அவரது படுக்கையை பிளாஸ்டிக் கவர் மூலம் மருத்துவமனை நிர்வாகம் மறைத்துள்ளது.
ஓர் ஆண்டிற்குள் இரண்டு முறை கொரோனாவை வெற்றி கொண்ட கார்மென் ஹெர்னாண்டஸ் சில தினங்களுக்கு மருத்துவமனையில் இருந்து திரும்பினார். ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமே அவரை வழி அனுப்பி வைத்தது. கொலம்பியா நாட்டில் இதுவரை 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல அங்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.