"குழந்தைகள்னு கூட பார்க்கல.." இரவில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைப்பு.. வங்கதேசத்தில் திக்திக்
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துவிட்டது. அங்கு இத்துகளைக் குறிவைத்து நடக்கும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு நள்ளிரவு நேரத்தில் இந்துக்கள் வசிக்கும் 5 வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குக் கடந்தாண்டு ஏற்பட்ட வன்முறையில் ஹசீனா ஆட்சி தூக்கி எரியப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகே அங்கு மெல்ல அமைதி திரும்பி வந்தது. இந்தச் சூழலில் தான் அங்கு இப்போது மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. அங்கு மீண்டும் அப்படியொரு மோசமான சம்பவம் வங்கதேசத்தில் நடந்துள்ளது.

வங்கதேச வன்முறை
அங்குள்ள பிரோஜ்பூர் மாவட்டத்தின் டும்ரிதலா கிராமத்தில் இந்து குடும்பத்தினர் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர். அங்கு இந்து குடும்பங்கள் வாழ்ந்த ஐந்து வீடுகள் நேற்றைய தினம் தீக்கிரையாக்கப்பட்டன. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் கொலையைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், இதுபோல சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதலும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 18ம் தேதி மயமன்சிங்கில், 29 வயதான தொழிலாளி தீபு சந்திர தாஸ் என்பவர் கொல்லப்பட்டார். அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாகச் சொல்லி படுகொலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
என்ன நடந்தது!
இந்தச் சம்பவம் நடந்து ஒரே வாரத்தில் இப்போது மீண்டும் இந்துக்களின் வீடுகள் அங்குத் தீக்கிரையாக்கப்பட்டன. தீ வேகமாகப் பரவ வேண்டும் என்பதற்காக ஒரே இடத்தில் துணிகளைப் போட்டு, அங்கு தீ வைத்துள்ளனர். துணியில் எளிதாகத் தீப்பற்றிய நிலையில், அது வேகமாகப் பரவியிருக்கிறது. இதன் காரணமாகவே அருகில் இருந்த 5 வீடுகளில் தீப்பற்றி இருக்கிறது. அங்குள்ள அடிப்படைவாத கும்பல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுக்கிறது.
திக்திக் சம்பவம்
அதிகாலையில் வீட்டின் கதவுகளை வெளியே பூட்டிவிட்டு மர்மக் கும்பல் தீ வைத்துள்ளது. உள்ளே அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில், தீயின் அனலை உணர்ந்தே அவர்கள் பதறியபடி எழுந்துள்ளனர். வீடுகள் பூட்டப்பட்டதால் முதலில் வெளியே எப்படி வருவது எனத் தெரியாமல் பதறிப் போனார்கள். உள்ளே குழந்தைகளும் இருந்த நிலையில், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு மாதிரி சமாளித்து ஜன்னலை உடைத்து வெளியே தப்பி வந்துள்ளனர். இருப்பினும், அவர்களின் வீடுகள், உடமைகள் மற்றும் செல்லப் பிராணிகள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
கைது செய்த போலீஸ்
தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 240 கி.மீ தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரோஜ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் முகமது மன்சூர் அகமது சித்திக் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அந்தக் குடும்பத்தினர் வீடுகளை இழந்து நடுரோட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தீ எப்படி ஆரம்பித்தது.. இந்த மோசமான செயலைச் செய்தது யார் என்பது தெரியவில்லை. அதேநேரம் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் அவர்கள் தங்கள் பெயர்களைக் கூட ஊடகத்தினரிடம் கூற மறுத்துவிட்டனர். அந்தளவுக்குச் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தும் ஒரு சூழலே வங்கதேசத்தில் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications