அமெரிக்கா ஒரு அடி எடுத்து வைத்தால்.. 'எரித்துவிடுவோம்'.. ஈரானின் மிரட்டலால் ஆடிப்போன டிரம்ப்!
மத்திய கிழக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. போருமில்லை, பேச்சுவார்த்தையுமில்லை என்ற நிலையில் இருந்து மீண்டும் அச்சுறுத்தல்கள் நிலைக்கு மாறியுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை (IRGC) அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஏதாவது புதிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால் மிகப்பெரிய அளவிலான மற்றும் கணிக்க முடியாத மோதலைத் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று IRGC அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

IRGC கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தெஹ்ரான் "ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்" என்ற பெயரில் மேற்கு ஆசியா முழுவதும் உள்ள கூட்டணி அமைப்புகளை ஒன்று சேர்த்து செயல்படுத்த தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இது பல முனைகளில் போரை உருவாக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஈரானிய அதிகாரிகள் அமெரிக்க கடற்படைக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். அமெரிக்கா மீண்டும் ஈரான் குறித்து தவறாக கணக்கீட்டு புதிய நடவடிக்கைகளை எடுத்தால், அமெரிக்காவின் போர் கப்பல்களை பெர்சியன் வளைகுடா கடலில் எரித்துவிடுவோம் என்று IRGC கடற்படையின் அரசியல் துணைத் தலைவர் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை வழக்கமான மோதலைத் தாண்டி, ஆச்சரியம் மற்றும் புதிய திறன்களைப் பயன்படுத்த அசிமெட்ரிக் போர் முறையை ஈரான் கையாளும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஈரானின் இப்புதிய எச்சரிக்கை அமெரிக்காவுக்கு பயத்தை காட்டியுள்ளது. ஏற்கனவே ஆயுத இருப்பு இல்லாமல் இருக்கும் அமெரிக்காவுக்கு இந்த புதிய அச்சுறுத்தல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் சமீபத்திய அமைதி பேச்சுவார்த்தை திட்டத்தை ஏற்க மறுத்துள்ளார். ஈரான் உடனடி போர் நிறுத்தம் மற்றும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை முன்மொழிந்துள்ளது. ஆனால் அணு ஆயுதத் திட்டம் குறித்த பேச்சுவார்த்தையை தனியாக விவாதிக்கவும், தற்போது அதை ஒத்திவைக்கவும் விரும்புவதாக அறிவித்தது.

இதை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. அணு ஆயுதப் பிரச்சினை முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசு உறுதியாக நிற்கிறது. ஈரானுக்கு அணு திறன் கிடைத்தால் அது பிராந்தியத்தை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்தும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. ஈரான் பொருளாதாரத் தடைகளை தளர்த்துதல், சமீபத்திய மோதல்களுக்கான இழப்பீடு மற்றும் வர்த்தக பாதைகளில் அதிக கட்டுப்பாடு ஆகியவற்றை கோருகிறது. அமெரிக்கா ஈரானின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை முழுமையாக முடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இந்த எதிரெதிர் நிலைப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் சிக்கியுள்ளது. இதனால் "போர் இல்லை, அமைதியும் இல்லை" என்ற நிலை உருவாகியுள்ளது. இரு தரப்பும் முழு மோதலுக்கு தயாராக இல்லை, ஆனால் பின்வாங்கவும் தயாராக இல்லை.
இந்த பதற்றம் வெறும் பிராந்திய பிரச்சினையாக மட்டும் இல்லை. உலக அளவில் எண்ணெய் விநியோகத்தை பாதித்து பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூலம் உலகின் பெரும் அளவிலான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது. தற்போது இப்பாதை மொத்தமாக முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை 111 டாலருக்கு உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications