போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை
வாஷிங்டன்: போலீசுக்கு பயந்து ஓடிய திருடன் நேரடியாக முதலை வாயிலேயே போய் சிக்கிக் கொண்ட ஒரு வினோதச் சம்பவம் நடந்துள்ளது. குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய அந்த நபர் போலீசிடம் இருந்து தப்பிக்க, சதுப்பு நிலத்தில் இறங்கி ஓடியுள்ளார். ஆனால், அவர் நேரடியாக முதலையிடம் போய் சிக்கிக் கொண்டாராம். இதில் அவர் இரு கைகளையும் இழந்து படுகாயமடைந்துள்ளார்.
போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆக பொதுவாகக் குற்றவாளிகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவார்கள். ஆனால், சில நேரம் போலீசாரை விட பெரிய ஆபத்தில் போய் மாட்டிக் கொள்வார்கள். அப்படியொரு வினோதமான சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.

என்ன நடந்தது!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு நபர், எதிர்பாராத விதமாக ஒரு முதலையிடம் சிக்கியுள்ளார், சினிமா காட்சியைப் போல நடந்த இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவி டிரெண்டாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, லூசியானாவின் 'இன்டர்ஸ்டேட் 10' நெடுஞ்சாலையில் ஒரு டொயோட்டா கார் மிகவும் ஆபத்தான முறையில் தாறுமாறாகச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த கார் ஒரு கான்கிரீட் தடுப்பில் மோதி, டயர் வெடித்த நிலையில் அங்கிருந்த போலீசார் அந்தக் காரை தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்தவர் 40 வயதான விக்டர் ரிவாஸ் என அடையாளம் காணப்பட்டார்.
முதலை
போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவர் காரை விட்டு இறங்கி, நெடுஞ்சாலையின் உயரமான பகுதியில் இருந்து கீழே இருந்த ஒரு சதுப்பு நிலத்திற்குள் குதித்துத் தப்பியோடினார். விக்டரை தேடும் பணியில் மாநில போலீசார் மற்றும் உள்ளூர் ஷெரிப் அலுவலக அதிகாரிகள் ஈடுபட்டனர். சிறிது நேரம் கழித்து, அவர் மீண்டும் சாலையோரம் நடப்பதை போலீசார் பார்த்துள்ளனர்.
அவரை பிடிக்க போலீசார் முயன்றபோது, விக்டர் மீண்டும் அதே சதுப்பு நிலத்திற்குள் ஓடி மறைந்தார். அப்போது தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. போலீசார் வைத்திருந்த உடல் கேமராவில் பதிவான காட்சிகளின்படி, விக்டர் தண்ணீரில் இருந்தபோது ஒரு பெரிய முதலை மின்னல் வேகத்தில் அவரை நோக்கி நீந்தி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த முதலை விக்டரை தாக்கியது. இதில் அவரது இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
கை போச்சு
முதலையிடம் கடி வாங்கிய பிறகும், விக்டர் விடாமல் தப்பியோட முயன்றார். இறுதியில், ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீசார் அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர். அவர் காட்டில் இருந்து வெளியே வரும் வரை காத்திருந்த போலீசார், அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். காயமடைந்த விக்டர் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டியது, போலீசாரின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் தப்பியோடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இந்த விவகாரத்தைச் சம்பந்தப்பட்ட உள்ளூர் போலீசார் நகைச்சுவையாகவே கையாண்டுள்ளனர். அவர்கள் இது தொடர்பாக ஒரு AI போட்டோவை பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு முதலை போலீஸ் சீருடை அணிந்து, ஆண்டின் சிறந்த காவல் அதிகாரி விருதைப் பெறுவது போலச் சித்தரிக்கப்பட்டிருந்தது.
நக்கல்
அவர்கள் மேலும், "நினைவில் கொள்ளுங்கள்.. குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள், போலீசிடம் இருந்து தப்பிக்க முயலாதீர்கள், முக்கியமாக லூசியானா சதுப்பு நிலங்களில் ஒளியாதீர்கள். அங்குள்ள வனவிலங்குகள் காவலர்கள் இருக்கிறார்கள் ஜாக்கிரதை" என்று பதிவிட்டுள்ளனர். போலீசுக்கு பயந்து முதலையிடம் மாட்டிய இவரது செயல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications