அமெரிக்காவில் இறங்கிய எதிரிகள்? அடுத்தடுத்து கொல்லப்பட்ட 10+ ஆய்வாளர்கள்.. திணறும் FBI
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த சில மாதங்களில் மட்டும் மிக முக்கிய பொறுப்பில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாயமாகியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு கொண்ட இவர்கள் இதுபோல மாயமாகி வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவின் மிக உயரிய பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றும் விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பதும், மாயமாவதுமான சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 2026 ஏப்ரல் நிலவரப்படி, சுமார் 10-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதுபோல மாயமாகியுள்ளனர். அல்லது உயிரிழந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து மர்மம்
முதலில் கார்ல் கிரில்மேயர் (Carl Grillmair).. கால்டெக் விண்வெளி ஆய்வாளரான இவர் கடந்த பிப்ரவரி 16ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டின் போர்ட்சில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் நாசாவின் பல முக்கியத் திட்டங்களில் பணியாற்றியவர். அடுத்து மோனிகா ரெசா (Monica Reza).. ஜேபிஎல் விண்வெளிப் பொறியாளரான இவர், கடந்தாண்டு ஜூன் 22ம் தேதி மலையேற்றத்தின் போது மாயமானார். ராக்கெட் என்ஜின்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகை சிறப்பு உலோகக் கலவையை இவர் கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வில்லியம் நீல் மெக்கஸ்லேண்ட் (Neil McCasland).. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான இவர் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நியூ மெக்ஸிகோவில் மாயமானார். இவர் அமெரிக்க வான்படை ஆராய்ச்சி ஆய்வகத்தின் முன்னாள் கமாண்டர் ஆவார். தனது செல்போன், கண்ணாடி போன்றவற்றை வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு இவர் மர்மமான முறையில் காணாமல் போனார்.
சதி?
ஆந்தனி சாவேஸ் மற்றும் மெலிசா காசியாஸ்.. லாஸ் அலமோஸ் ஆய்வகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் 2025-ல் சில வார இடைவெளியில் அடுத்தடுத்து மாயமாகினர். அதேபோல எம்ஐடி அணுக்கரு இணைவு மையத்தின் இயக்குநரான நூனோ லூரேரோ, டிசம்பர் 2025-ல் தனது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் நடக்கும் சூழலில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்குமோ என்ற கோணத்தில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன:
இந்த மரணங்கள் மற்றும் மாயமான சம்பவங்களுக்கு இடையே ஏதேனும் பொதுவான தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய எஃப்பிஐ தலைமையில் எரிசக்தித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் நாசா ஆகிய அமைப்புகள் இணைந்து முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றன.
நாடாளுமன்ற கமிட்டி
அங்குள்ள குடியரசுக் கட்சித் தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டியும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அணுக்கரு ரகசியங்கள் அல்லது ராக்கெட் தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்கள் திருடப்படுமோ என்று இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், விஞ்ஞானிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்தக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை வரை இது குறித்து தகவல் போய் இருக்கிறது. இந்தச் சம்பவங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதே சமயம், சில பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தச் சம்பவங்கள் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களின் நிகழ்ந்துள்ளதால் இவற்றுக்கு இடையே நேரடித் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
கேள்வி
அமெரிக்காவின் பாதுகாப்பு ரகசியங்களுடன் தொடர்புடையவர்கள் இப்படி அடுத்தடுத்துப் பாதிக்கப்படுவது தற்செயலான நிகழ்வா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பதுதான் தற்போது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட கண்ணிவெடி சிக்கல்களைப் போல, இதுவும் ஒரு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மர்மமாகவே பார்க்கப்படுகிறது.
உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளின் பாதுகாப்பு என்பது வெறும் தனிநபர் பாதுகாப்பு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் பாதுகாப்புடன் நேரடித் தொடர்புடையது என்பதால் இது அமெரிக்காவுக்குத் தலைவலியைக் கொடுப்பதாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications