அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி!
மஸ்கட்: ஓமன் கடற்கரை அருகே அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அவர்கள் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதை துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ஓமன் கடற்கரை அருகே பலாவு நாட்டின் கொடியுடன் சென்ற 'எம்.டி. செட்டபெல்லோ' என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் மீது அமெரிக்க மத்திய கட்டளை (US Central Command) படைகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தின. ஈரான் மீதான அமெரிக்காவின் தடையை மீறி எண்ணெய் கொண்டு சென்றதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தக் கப்பலில் மொத்தம் 28 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 24 பேர் இந்தியர்கள், இருவர் பாகிஸ்தானியர்கள், ஒருவர் ரஷ்யர் மற்றும் ஒருவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர். தாக்குதலுக்குப் பிறகு 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் மாயமாகி இருந்தனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பிறகு, மாயமான 3 இந்தியர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள், ஆதித்யா சர்மா, சிவானந்த் சௌராசியா, பட்னாலா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் சர்பானந்த சோனோவால், "எம்.டி. செட்டபெல்லோ கப்பலில் நடந்த இந்தத் துயரமான சம்பவம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மாயமான மூன்று இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நமது கடல்சார் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மோடி அரசு உறுதுணையாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மீட்கப்பட்ட மாலுமிகளை உடனடியாக தாயகம் அழைத்து வரவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியா கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரியை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சர்வதேச கடல் வழித்தடங்களில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் கவலைக்குரியவை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஒரே வாரத்தில் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மீது அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஜூன் 8-ம் தேதி 'எம்.டி. மரிவெக்ஸ்' என்ற கப்பல் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது, அதில் இருந்த 24 இந்தியர்களும் ஓமன் அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications