"இந்தியா ஒரு கையெழுத்து போட்டால் போதும்! ஆனா எங்க நிலைமை மோசம்!" புலம்பி தள்ளும் பாகிஸ்தான் அமைச்சர்
இஸ்லாமாபாத்: மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் பாகிஸ்தான் கடும் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையே அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி மாலிக், பாகிஸ்தானிடம் ஒரு நாள் கூட அவசரக் காலத் தேவைகளுக்கான கையிருப்பு இல்லை என்றும் இந்தியா நினைத்தால் ஒரே கையெழுத்தில் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்றும் புலம்பித் தள்ளி இருக்கிறார்.
வளைகுடா போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு ஆசிய நாடுகளுக்கு வரும் கச்சா எண்ணெய் சப்ளை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதனால் மிக மோசமான பாதிப்பு இல்லை என்ற போதிலும் மற்ற நாடுகளில் நிலைமை மோசமாகவே இருக்கிறது.

பாகிஸ்தான் அமைச்சர்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் போர் பதற்றம் காரணமாகப் பாகிஸ்தானின் எரிசக்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டியில், அந்நாட்டு பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி மாலிக் பாகிஸ்தான் நிலைமை மோசமாகவே இருப்பதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
பாகிஸ்தானின் தற்போதைய நிலையை விவரித்த அலி மாலிக், "பாகிஸ்தானிடம் தற்போது அவசரக் காலத் தேவைக்கான யுத்த கால எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடையாது என்பதே உண்மை. எங்களிடம் இருப்பது வணிக ரீதியான இருப்பு மட்டுமே. கச்சா எண்ணெய் 5 முதல் 7 நாட்களுக்கு மட்டுமே வரும். எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் அதிகபட்சம் 20 முதல் 21 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஒரே கையெழுத்து
இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், "நாங்கள் இந்தியாவைப் போன்றவர்கள் அல்ல. இந்தியாவோ 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்துள்ளது. அங்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டால், ஒரு கையெழுத்தில் அந்த இருப்பை வெளியிட்டு அவர்களால் நிலைமையைச் சீர் செய்ய முடியும். ஆனால் பாகிஸ்தானின் எரிசக்தி அமைப்பு வெளிப்புறத் தாக்குதல்களால் எளிதில் நிலைகுலையும் நிலையில் உள்ளது" எனப் புலம்பித் தள்ளி இருக்கிறார்.
ஏன் பாகிஸ்தானால் சேமிக்க முடியவில்லை?
பாகிஸ்தான் தனது எரிபொருள் சேமிப்புத் திறனை அதிகரிக்கப் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டும், நிதி நெருக்கடி காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் அவசரக் கால இருப்பை உருவாக்குவதற்குப் பல நூறு மில்லியன் டாலர்கள் தேவைப்படும். தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் பாகிஸ்தானால் அவ்வளவு தொகையைச் செலவிட முடியவில்லை. மேலும், வரலாற்றில் இல்லாத அளவுக்குத் துபாய் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 170 டாலர் வரை எகிறக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் இந்த அதீத மாற்றங்கள் பாகிஸ்தானைத் திணறடிக்கின்றன.
இந்தியாவின் பலம் என்ன?
இந்தியாவைப் பொறுத்தவரை, அவசரக் காலத் தேவைக்காக 5.33 மில்லியன் மெட்ரிக் டன் (சுமார் 36.92 மில்லியன் பேரல்கள்) கச்சா எண்ணெய்யைச் சேமித்து வைக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், பாகிஸ்தானோ இப்போதுதான் ஹார்முஸ் ஜலசந்தி ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கான இருப்பைத் திட்டமிடத் தொடங்கியுள்ளது. இருப்பினும், அதை உருவாக்க மிகப் பெரிய நிதி முதலீடும் நீண்ட கால திட்டமும் அவசியம்.!
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது வெறும் ராணுவத்தில் மட்டும் இல்லை, அந்த நாடு சந்திக்கும் பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறது என்பதிலும்தான் இருக்கிறது. இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை இன்று ஒரு நெருக்கடியான சூழலில் நம்மைப் பாதுகாப்பாக வைத்துள்ளது. மறுபுறம் பாகிஸ்தான் அமைச்சர் அலி மாலிக்கின் இந்த ஒப்புதல் வாக்குமூலம், அந்நாட்டின் பொருளாதாரச் சிதைவையே காட்டுகிறது.!












Click it and Unblock the Notifications