பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சபட்ச கவுரவம்! மிக உயரிய விருதை வழங்கிய ஸ்வீடன்! வரலாற்று சாதனை
ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் நாட்டுக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. ஆசியாவில் இந்த விருது முதல் முறையாக பிரதமர் மோடிக்குதான் வழங்கப்பட்டிருக்கிறது.
நேற்று ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தில், அந்நாட்டு அரச குடும்பத்தின் இளவரசி விக்டோரியா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த உயரிய விருதை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்வின் போது ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் உடனிருந்தார்.

வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களுக்கு ஸ்வீடன் நாடு வழங்கும் மிக உயரிய சிவிலியன் விருது இதுவாகும். இந்த விருதை பெற்றதன் மூலம், ஆசியாவிலேயே இந்த விருதைப் பெறும் முதல் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது பிரதமர் மோடி பெறும் 31-வது சர்வதேச விருது ஆகும்.
'ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்' வரலாறு
இந்த விருது மிகவும் வரலாற்றுப் பழமை வாய்ந்தது. 18-ம் நூற்றாண்டில் (1748 ஆம் ஆண்டு) ஸ்வீடன் மன்னரால் இது தோற்றுவிக்கப்பட்டது. பொதுச் சேவையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கும், ஸ்வீடன் நாட்டின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்த பாடுபடும் உலகத் தலைவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. அறியாமை என்ற இருளைக் கிழித்துக்கொண்டு ஒளிரும் 'துருவ நட்சத்திரத்தை' குறிக்கும் வகையில் இதன் கறுப்பு நிற ரிப்பன் வடிவமைப்பு அமைந்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, இரு நாட்டுப் பிரதமர்களும் தங்களின் ஆழமான கலாச்சாரப் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் சிறப்புப் பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர்.
ஸ்வீடன் அரசு, இந்தியாவின் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் ஸ்வீடன் தேசிய ஆவணக் காப்பகத்தில் எழுதிய இரண்டு கவிதை வரிகளின் அசல் பிரதியை ஒரு கோபால்ட்-புளூ பெட்டியில் வைத்து பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கியது.
தாகூர் 1913-ல் நோபல் பரிசு பெற்றபோது ஸ்வீடன் செல்ல முடியவில்லை என்றாலும், பின்னர் 1921 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் அங்கு பயணம் மேற்கொண்ட வரலாற்று நினைவுகளை இந்தப் பரிசு நினைவு கூர்ந்தது.
இந்தியா - ஸ்வீடன் இடையேயான வர்த்தகம் 2025 ஆம் ஆண்டில் $7.75 பில்லியன் டாலர்களை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் தங்களின் உறவை 'மூலோபாய கூட்டாண்மை' என்ற அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளன. பசுமை ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, விண்வெளித் துறை, பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய முக்கியத் துறைகளில் இணைந்து செயல்பட இரு நாட்டுப் பிரதமர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications