செந்தில் பாலாஜி தம்பி மீது 4 பிரிவுகளில் வழக்கு.. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் அதிரடி
சென்னை: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இவர்கள் மீது மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பிரிவுகள் என்னென்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டசபை தொகுதியின் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் இளையராஜா. இந்நிலையில் தான் சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று இளையராஜாவிடம் பேரம் பேசப்பட்டுள்ளது.

ரூ.35 கோடி வரை தருவதாக கூறி ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு பேரம் பேசி உள்ளார். இதுதொடர்பாக தவெக எம்எல்ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கார்த்திக், ரமேஷ் ஆகியோரும் சிக்கினர். இதனால் கைது எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் இன்னும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் சகேதாரர் அசோக் குமார், கைதாகி உள்ள நரேசை சென்னையில் சந்தித்து பேசி உள்ளதாகவும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலில் தான் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் தவெக எம்எல்ஏ இளையராஜா புகாரளித்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அசோக் குமார் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எஃப்ஐஆர் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 7, ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 12, பிஎன்எஸ் 318 (4), பிஎன்எஸ் 351 (2) என மொத்தம் 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7 என்று பொது வாழ்க்கையில் உள்ளவருக்கு அவரது கடமைகளை செய்வது அல்லது முறையற்ற முறையில் ஒன்றை மேற்கொள்ள ஆதாயம் அளிக்க முயல்வது என்பதாகும். ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 12 என்பது ஊழல் செய்ய தூண்டுதல் என்பதை குறிக்கும். பிஎன்எஸ் பிரிவு 318(4) என்பது மோசடிக்கான குற்றமாகும். இந்த பிரிவு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC)பிரிவு 420-க்கு மாற்றாக தற்போது செயல்பட்டு வருகிறது. அதேபோல் பிஎன்எஸ் பிரிவு 351 (2) என்பது கிரிமினல் இன்டிமிடேஷன் ஆகும். அதாவது சட்டப்படி செய்யக்கூடாத ஒரு செயலை செய்யும்படி ஒரு நபர் அல்லது அவரது பெயரை மிரட்டும் செயலாகும்.












Click it and Unblock the Notifications