ரூ.20 கோடியில் அடியோடு மாறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்.. ஆகஸ்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
கோவை: மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 150 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ரயில் நிலையம் நவீன கட்டுமானங்களுடன் ரூ.20 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ஆகஸ்டு மாதம் முதல் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ராமேசுவரம், மதுரைக்கு தினசரி புதிய ரயில்கள், அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மங்களூரு இன்டர்சிட்டி ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 150 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும் . ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கட்டப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் சென்னைக்கும் சென்னையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கும் போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் தினசரி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் தினசரி மலை ரயில் இயக்கப்படுகிறது. இதுதவிர வாராந்திர சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்கள் மற்றும் கேரளம் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு புதிய ரெயில்களை இயக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார மக்கள் மற்றும் நீலகிரி மாவட்ட மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேட்டுப்பாளையத்தை பொறுத்தரை ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் என மலைவாசல் தலங்களுக்கு செல்ல முக்கியமான வழித்தடம் ஆகும்.
கோவை மாவட்டத்தின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வர்த்தக மையமாக மேட்டுப்பாளையம் திகழ்கிறது. மேட்டுப்பாளையத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, உள்கட்டமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தி ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் யார்டு விரிவாக்க திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பில் யார்டு விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய அதிகாரியின் புதிய கேபின் அறை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீட்டர் கேஜ் பகுதியில் லோகோ என்ஜினை நிறுத்த லோகோ ஷெட் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது புதிய தண்டவாளம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் கூடுதலாக இயக்கப்படும் புதிய ரயில்களுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்டர் கேஜ் பகுதியில் புதிய நடைமேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தன.
அதன் பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து மற்ற முக்கிய பகுதிகளுக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அவற்றின் விவரங்களை பார்ப்போம். புதிய ரயில் அறிமுகம்:
மேட்டுப்பாளையம் - ராமேஸ்வரம்: போத்தனூர், பொள்ளாச்சி வழியாகத் தினசரி புதிய ரயில் இயக்கப்படும்.
வந்தே பாரத் ரயில் நீட்டிப்பு:
சென்னை - கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் (20643/44) அதிவிரைவு ரயில், இனி மேட்டுப்பாளையம் வரை நீட்டிக்கப்படும் (புதன்கிழமை தவிர).
கேரளா மற்றும் கர்நாடகா ரயில்கள் நீட்டிப்பு:
கோவையிலிருந்து மங்களூர் செல்லும் தினசரி ரயில் (22609/10).
கோவையிலிருந்து கண்ணூர் செல்லும் தினசரி ரயில் (16607/08).
கோவையிலிருந்து மங்களூர் செல்லும் மற்றொரு ரயில் (16323/24).
மதுரை ரயில் நீட்டிப்பு:
கோவை - மதுரை (16721/22) தினசரி ரயிலும் இனி மேட்டுப்பாளையத்திலிருந்தே புறப்படும்.














Click it and Unblock the Notifications