சிஎஸ்கே ஜெர்சிக்காக உயிரைக் கொடுத்து விளையாடுவோம்.. வெற்றிக்கு பின் ருதுராஜ் சொன்ன வார்த்தை!
சென்னை: சிஎஸ்கே அணி ஜெர்சியின் பெருமைக்காகவும், ரசிகர்களின் உண்மையான ஆதரவுக்காகவும் உயிரைக் கொடுத்து விளையாடுவோம் என்று அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். சிஸ்கே அணியின் திட்டம் எப்போதும் எளிமையாக இருக்கும் என்று கூறியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், பவுலிங் தங்களின் வெற்றிக்காக சிறந்த பங்களிப்பை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. மும்பை அணிக்காக நமன் திர் 37 பந்துகளில் 57 ரன்களை சேர்த்தார். சிஎஸ்கே அணிக்காக அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 67 ரன்களையும், கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரிகள் உட்பட 54 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணிக்கு இது 4வது வெற்றியாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டிக்கு பின் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணிக்கு நல்ல மொமெண்டம் கிடைத்தது. ஆனால், மிடில் ஓவர்களில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக அன்சுல் கம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோரின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது.
அதேபோல் டாப் ஆர்டர் பேட்டர்களில் ஒருவர் கடைசி வரை நின்றால் வெற்றி எளிதாகும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். கார்த்திக் சர்மா ஒரு சிறந்த சிக்ஸர் ஹிட்டர் மட்டுமல்ல, சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடும் பக்குவம் அவரிடம் உள்ளது. இந்த அரைசதம் அவருக்குப் பெரிய நம்பிக்கையைத் தரும்.
நாங்கள் எதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல், எளிய திட்டங்களுடன் களம் இறங்குகிறோம். தவறுகள் நடக்கலாம்.. அது ஆட்டத்தின் ஒரு அங்கம். ஆனால் சிஎஸ்கே அணியின் ஜெர்சிக்காகவும், எங்களுக்கு ஆதரவாக நிற்கும் ரசிகர்களுக்காகவும் உண்மையாக உயிரைக் கொடுத்து விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications