"15 வயது சிறுவனைப் பார்த்து இவ்வளவு பயந்ததில்லை" வைபவ் சூர்யவன்ஷியால் மிரண்ட கைல் ஜாமிசன்!
மும்பை: என் வாழ்நாளில் 15 வயது சிறுவனை பார்த்து இவ்வளவு தூரம் பயந்ததே இல்லை என்று டெல்லி அணி வீரர் கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது வைபவ் சூர்யவன்ஷி விக்கெட்டை வீழ்த்திய பின், கைல் ஜேமிசன் இந்த வார்த்தையை கூறியுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், இந்த இளம் வீரரின் பேட்டிங் திறமையைக் கண்டு தான் வியந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கைல் ஜேமிசன் பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சிறுவனைப் பார்த்து நான் இந்த அளவிற்குப் பயந்ததே இல்லை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதம் மற்றும் அவரது டைமிங் ஒரு முதிர்ச்சியடைந்த சர்வதேச வீரரைப் போலவே இருக்கிறது. 15 வயதில் இவ்வளவு தன்னம்பிக்கையுடன் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல.
அவர் பந்தை அடிக்கும் வேகம் என்னை உண்மையில் மிரளச் செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசன் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு கனவுத் தொடராக அமைந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் அவர் காட்டியுள்ள அதிரடி, அவரை ஆரஞ்சு கேப் ரேஸிலும் முன்னிலையில் நிறுத்தி இருக்கிறது.
இந்த சீசனில் ஒரு போட்டியில் வெறும் 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரது இந்த ஆக்ரோஷமான ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, வைபவ் சூர்யவன்ஷி இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 404 ரன்களைக் குவித்துள்ளார்.
15 வயதிலேயே கிறிஸ் கெய்ல் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டத்தை நினைவூட்டும் வகையில் இவரது சிக்ஸர்கள் அமைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் ஜாம்பவான் பவுலர்களான பும்ரா, ஹேசல்வுட், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், ரபாடா உள்ளிட்ட வீரர்களையும் வைபவ் சூர்யவன்ஷி பதம் பார்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications