லுங்கி நிகிடிக்காக "கிரீன் காரிடர்" 11 நிமிடத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! பரபரப்பான டெல்லி சாலை
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக பீல்டிங் செய்த போது டெல்லி வீரர் லுங்கி நிகிடி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். மைதானத்திற்கு உள்ளேயே ஆம்புலன்ஸ் வந்து நிகிடியை அழைத்து சென்றது. தாமதம் இன்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக டெல்லியில் சாலையில் கிரின் காரிடர் ஏற்படுத்தியுள்ளது டெல்லி போலீஸ்..
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த டெல்லி அணி வீரரும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருமான லுங்கி நிகிடி தலையில் காயம் அடைந்தார்.

கேட்ச் ஒன்றை பிடிக்க முற்பட்ட போது தடுமாறி தலைகுப்புற விழுந்தார். இதில் காயம் அடைந்த நிகிடி சிறிது நேரம் அப்படியே கிடந்தார். உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்டிரெட்ச்சரில் தூக்கப்பட்ட நிகிடி அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நிகிடியை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக டெல்லி சாலையில் கிரீன் காரிடார் ஏற்படுத்தப்பட்டது. அதாவது, அனைத்து சிக்னல்களிலும் கிரீன்லைட் எரியவிட்டு, டிராபிக் இன்றி வேகமாக ஆம்புலன்ஸ் கடக்க டெல்லி போலீசார் ஏற்பாடு செய்தனர். இதனால் 11 நிமிடத்தில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்தது.
டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இருந்து நிகிடி அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை உள்ள ராஜேந்திர நகருக்கு 9.3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. சாதாரணமாக இந்த இடத்தை சென்றடைய அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும். இதனால், நிகிடிக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சையில் எந்த தாமதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விரைவாக இந்த ஏற்பாட்டை டெல்லி போலீசார் செய்துள்ளனர்.
நிகிடி காயம் அடைந்ததும், போட்டி ஏற்பட்டாளர்கள் உடனடியாக டெல்லி டிராபிக் போலீசாரை தொடர்பு கொண்டு காயம் அடைந்த வீரர் ஒருவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என்று தொடர்பு கொண்டுள்ளனர். இதையடுத்து டெல்லி ஏசிபி சஞ்சய்சிங், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கிரீன் காரிடரை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் வழக்கமாக சனிக்கிழமை மாலை வேளையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். டெல்லியில் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதை பார்க்க முடியும். எனவே, இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்ளாமல் இருக்க கிரீன் காரிடர் ஏற்படுத்தப்பட்டு நிகிடியை ராஜேந்திர நகரில் உள்ள பிஎல்.எக்ஸ் மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நிகிடி தலைவலி மற்றும் கழுத்து வலியால் துடித்த நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருக்கு உடல் நலமாக இருப்பதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நிகிடி காயம் காரணமாக வெளியேறியதால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் அவருக்கு பதிலாக விப்ராஜ் நிகம் மாற்று வீரராக களத்தில் இணைந்தார்.
டெல்லியில் நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 264 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.












Click it and Unblock the Notifications