பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளன. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். பிரச்சனையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்'' என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.
Recommended Video
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டதால் தான் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டு வருகின்றனர்.
மேலும் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தலைநகர் கொழும்புவில் உள்ள காலி முகத்திடலில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய அமைச்சர்கள்
இதற்கிடையே ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் 26 அமைச்சர்களும் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதன்பிறகு நிதி உள்பட 4 துறைகளில் மட்டும் புதிய அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து நேற்று புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. இதில் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

உண்மை பேசிய கோத்தபய ராஜபக்சே
இந்நிலையில் தான் தனது அரசின் தவறான பொருளாதார கொள்கையால் நாடு மோசமான நிலையில் உள்ளது என்பதை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இதை சரிசெய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து புதிய அமைச்சர்கள் மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசினார். அப்போது அவர் பேசிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:

தீர்வு காண முயற்சி
‛‛கடந்த இரண்டரை வருடங்களில் நாம் பெரிய வால்களைச் சந்தித்துள்ளோம். கொரோனா பரவல், கடன் சுமை மற்றும் எனது அரசின் தவறுகளால் தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது சரிசெய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனைகளை தீர்க்க தீர்வு கண்டறிய வேண்டும். மேலும் மக்களின் நம்பிக்கையையும் நாம் பெற வேண்டும். பொருளாதார நெருக்கடி, இதையடுத்து உருவான அரசியல் நெருக்கடி ஆகியவற்றுக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறோம்.

வருந்துகிறேன்
கடன் நெருக்கடியை சமாளிக்க முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தை அணிகியிருக்க வேண்டும். மேலும், இலங்கையில் முழுமையாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வகையில் ரசாயன உரத்தை தடை செய்திருக்க கூடாது. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டில் உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும்'' என்றார்.

அமெரிக்காவில் பேச்சுவார்த்தை
இதற்கிடையே பொருளாதார நெருக்கடியால் வெளிநாடுகளுக்கான கடன், வட்டி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை நாடியுள்ளது. இந்த நிதியத்துடன் அமெரிக்காவின் வாஷிங்டனில் இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கே, நிதி அமைச்சரின் செயலாளர் மகிந்த சிறிவர்தனா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.












Click it and Unblock the Notifications