கள்ளச்சந்தையில் மதுபானம்? கைதான சித்தப்பாவை விடுவிக்கக் கோரி வளைகாப்பு கோலத்தில் கர்ப்பிணி தர்ணா!
செங்கம்: வளைகாப்பு நிகழ்ச்சிக்காக மதுபாட்டில்களை வாங்கியதாக புகாரின் பேரில் கைதான தனது சித்தப்பாவை விடுவிக்குமாறு காவல் நிலையத்தில் கர்ப்பிணி தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45), இவருக்கு இதயம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் நோய் உள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இவரின் தம்பி இறந்த நிலையில் அவரது மகளான சத்தியா மற்றும் கேசவன் என்பவருக்கு தானே முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதேபோல் அவர்களுடைய வளைகாப்பு விழாவையும் முருகன் முன்னிலையில் நடத்த நேற்று திட்டமிடப்பட்டு விழாவுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் அவரே முன்னின்று நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த உறவினர்களுக்கும், பேண்ட் செட் குழுவினருக்கு மதுபானம் வாங்குவதற்காக சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று முருகன் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வெளியே வரும் பொழுது செங்கம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையான போலீசார் முருகனை மடக்கி அவரிடமிருந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்வதற்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மதியம் முதல் இரவு வரை முருகனை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விடுவிக்காததால் நேற்று இரவு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் தனது தந்தையாக இருந்து தனக்கு அனைத்தும் செய்து தருவார் என எதிர்பார்த்த சித்தப்பா வராததால் சத்தியாவுக்கு வேதனை ஏற்பட்டது.
இதனால் வளைகாப்பு கோலத்தில் சத்தியாவும் கேசவனும் அமலாக்க பிரிவு காவல் நிலையத்தில் வந்தனர். அங்கு காவல் ஆய்வாளர் சாந்தியை சந்தித்து தனது சித்தப்பா, "மது விற்பவர் அல்ல, அவர் விழாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே வாங்கி கொடுத்து உள்ளார்" என சத்தியா மன்றாடினார்.
ஆனாலும் சித்தப்பா முருகனை காவல் துறையினர் விடுவிக்கவில்லை. இதனால் தனது கணவர் கேசவனுடன் காவல் நிலையத்திலேயே அமர்ந்தும் தனது சித்தப்பாவை விடுவிக்குமாறு சத்தியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல் அதே பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் முருகன் கள்ளச் சந்தையில் மது விற்பவர் அல்ல என்று ஊர்மக்கள், காவல் ஆய்வாளர் சாந்தியிடம் சொல்லியும் கேட்காமல் காவல் நிலைய மேஜையில் 50 பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைத்து முருகனை நிக்க வைத்து புகைப்படம் எடுக்க முயற்சித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் மேசை மீது அடுக்கி வைத்திருந்த 50 மது பாட்டில்களில் சில பாட்டில்களை தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதால் காவல் நிலையம் முழுவதும் களேபரமானது. தங்கள் சித்தப்பா மீது போலீஸார் பொய் வழக்கு போடுவதாக சத்தியாவும் உறவினர்களும் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக நேற்று மே தினம் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் மது பிரியர்களுக்கு கள்ள சந்தையில் கூடுதல் விலையில் விற்பனை செய்வதற்காக வழக்கமாக அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட நபர்கள் மது விற்பனை செய்வார்கள். அந்த வகையில் முருகனும் கள்ளச்சந்தையில் மது விற்பவர் என போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு காவல் துறையினரிடம் விசாரித்த போது:
டாஸ்மாக் கடைகளில் 8 பாட்டில்களுக்கு அதிகமாக யார் வாங்கினாலும் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு அதிகாரம் இருக்கிறது. முருகன் அளவிற்கு அதிகமாக மது பாட்டில் வாங்கியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து செங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தனர்.












Click it and Unblock the Notifications