முகத்தில் தெளித்த சாரல்...
எங்கே மனிதர்கள் இருக்கின்றனரோ
அங்கே ஈக்களையும் காண்போம்
புத்தர்களையும் தான்
இஸ்ஸா
மேலோட்டமாகப் பார்த்தால் மிகச் சாதரணமானது இந்த ஹைகூ-
ஆழ்ந்து கவனித்தால் மிகவும் நுட்பமானது.
நாம் எதையுமே ஆழந்து கவனிப்பதில்லை-
நம் விரல்களைக் கூட
நகங்களைக் கூட
கவனிப்பது மிகவும் சிரமமானது-
பார்ப்பது மிகவும் சுலபமானது
பார்ப்பதையும் கேட்பதையுமே கவனிப்பதாகக் கருதிக் கொண்டிருக்கிறோம்.
பார்ப்பதும், கேட்பதும் கவனிப்பதற்காக அல்ல-
கவனிப்பதிலிருந்து தப்பிப்பதற்காகத்தான்.
மனிதர்கள் இருக்குமிடமெல்லாம்-
ஈக்கள் இருக்கின்றன-
காரணம் மனிதர்களுடன் சேர்ந்தே
அழுக்கும் இருகின்றது-
அழுக்கு, அசுத்தம் இருக்கும் போதெல்லாம்-
அவற்றில் பிழைக்கிற ஜீவராசிகளும் உயிர் வாழ்கின்றன-
நம் கழிவுகள் அவற்றிற்கு உணவாகின்றவே
என்று ஒருபோதும் மகிழ வேண்டியதில்லை-
அவற்றின் கழிவுகள் மறுபடியும்
நமக்கே உணவாகத் திரும்பி வருகின்றன.
மனிதர்கள் இருக்கும் இடத்தில்
ஈக்களைத் தேட ஒரு போதும் நாம் பிரயத்தனம் செய்வதில்லை
அதற்கான அவசியமில்லை-
நமது பிரயத்தனமெல்லாம்
ஈக்களைத் தேடுவதில் இல்லை-
அவற்றைத் துரத்தியடிப்பதில் தான்-
நம்மிடமிருந்து அவை தப்பிப்பதில்லை-
நாம்தான் அவற்றிலிருந்து தப்பிக்கிறோம்-
யானைக்கான வலையில் யானை விழுகிறது-
கொசு வலையில் மனிதர்கள் புகுந்து கொள்கிறார்கள்
என யாரோ சொன்னது நிஜம்.
கழிவு அடிப்பகுதியிலிருந்து வருகிறது-
உடலின் இறுதி உறுப்பு கழிவின் முகத்துவாரம்.
கழிவு கீழ் நோக்கிச் செல்கிறது-
வியர்வையும் - மேல் பகுதி
எச்சிலும் மேல் பகுதி
மையப்பகுதி சுத்திகரித்துக் கொண்டே
மேல்பகுதிக்குக் கழிவை உதைத்துத் தள்ளுகிறது.
ஞானம் மேல்நோக்கிய பயணம்-
உள்மையத்தை நோக்கிய மனப்பயணத்தில்
ஞானம் உற்பத்தியாகிறது.
மனிதர்களை இருக்கும் இடத்தில்
கழிவு மட்டுமல்ல
ஞானமும் தான் உண்டாகிறது.
நம்மிடையே ஈக்கள் மட்டுமல்ல-
தேனீக்களும் தான் இருக்கின்றன.
மலத்தைச் சுற்றும் ஈக்களும் இருக்கின்றன-
மலர்களைச் சுற்றும் தேனீக்களும் இருக்கின்றன-
ஈக்கள் உருவாகக் கழிவு இருப்பது போல
புத்தர்கள் உருவாக ஞானமும் நிறைந்திருக்கிறது.
நம் கண்களுக்கு கழிவு மட்டுமே தெரிகிறது-
ஞானம் தெரிவதில்லை.
ஈக்கள் மட்டுமே தெரிகின்றன-
புத்தர்கள் தெரிவதில்லை.
ஈக்களைக் கண்டு பிடிப்பதைப் போலவே
புத்தர்களைக் கண்டு பிடிப்பதும் எளிது-
நம் பார்வையில் ஆழம் அதிகரிக்க வேண்டும்-
நம் கவனிப்பு அடர்த்தியாக வேணடும்.
எதிர்மறைத் திசையிலேயே செல்லும் நம் ஆர்வத்தை
திருப்பிச் செலுத்த வேண்டும்.
அன்பும், கருணையும், தன்முனைப்பற்ற தன்மையும்
நிரம்பி வழிய வேண்டும்-
எதிர்பார்ப்பற்று செடிக்கு நீரி ஊற்றுபவர்க்கும்,
வாசலைப் பெருக்குபவர்களும்,
செருப்பின் அறுந்த பகுதியிலே முழு கவனத்தையும் செலுத்துபவர்க்கும்
உளியின் மேல் தன்னை முழுவதுமாக குவித்திருப்பவர்க்கும்
புத்தர்களாகத் தெரிபவர்கள்-
மற்ற புத்தர்களைத் தேடுவதற்கு முன்
நமக்குள் ஒளிந்திருக்கும் புத்தரைக் கண்டுபிடிக்க முனைவோம்.












Click it and Unblock the Notifications