கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்
ஒரு காட்டுல பெரிய்ய ஆலமரம் இருந்தது. அதுல ஒரு சிட்டுக் குருவி கூடுகட்டி முட்டை இட்டு அடைகாத்து ஒரு குட்டிக் குஞ்சு பொரிச்சது.
குட்டிக் குருவிக்கு ரொம்பச் செல்லம். அது என்ன சொன்னாலும் குருவி கேக்கும்.
ஒரு நா, அம்மா குருவி இரை கொண்டாந்து குட்டிக் குருவிக்கி ஊட்ட வந்தது.
அம்மா அம்மா, நா ஒரு கதை சொல்லுவனாம் நீ கேப்பயாம். அப்பொதாம் நா இரை திம்பேனாம் ன்னது.
சரி, சொல்லு ன்னது தாய்க் குருவி.
ஒரு குளத்துல அழகான ஒரு மீன்குஞ்சி இருந்துதாம்.
ம்போட்டுக் கேட்டது தாய்க் குருவி.
ரொம்ப சந்தோசம தண்ணிக்குள்ள மேல வரவும் கீழெ போகவுமா விளையாடிக்கிட்டே இருந்தது. அந்த மீன் குஞ்ச பிடிக்கணும்னு ரொம்ப நாளா ஒருகொக்கு கண்ணு வச்சிக்கிட்டே இருந்துதாம்.
ஒரு நா அந்த மீன்குஞ்ச பிடிச்சிட்து கொக்கு. என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. கல கலன்னு சிரிசிதாம் மீங்குஞ்சு.
கொக்குக்கானா ஆச்சரியம்.
அப்பொ அந்த மீங்குஞ்சு சொல்லிச்சாம்:
கொக்கு கொக்கு நா ஒரு கதை சொல்லட்டுமான்னு கேட்டுதாம்.
கதைன்னா ரொம்ப இஸ்டம்; சொல்லு சொல்லுனுதாம்.
படித்துறையில மீன்குஞ்ச விட்டது. மீன் குஞ்சு சொல்ல ஆரம்பிச்சது.
ஒரு காட்டுல ஒரு நரி இருந்தது.
ம் போட்டு கேட்டுது கொக்கு.
அந்த நரிக்கு ரொம்ப பசி வந்துட்டது. எங்கயுமே இரை கிடைக்கல. சுத்தி சுத்தி வந்தது. பசி அதிகமாயிட்டது.
அப்பொ,
தூரத்துல ஒரு கொடிமுந்திரி (திராட்சை) தோட்டம் கண்ணுக்குத் தெரிஞ்சது. அங்கெ போனா ஏதாவது கிடைக்கும்னு போனது.
ரொம்ப உயரத்துல ஒரே ஒரு முந்திரப்பழக் கொத்து நல்லாப் பழுத்து வாசம் கமகமன்னு வருது. நரிக்கு என்னா செய்யறதுன்னு தெரியல!
எப்படியாவது பழத்த கவ்விப் பிடிச்சிற வேண்டியதுதாம் னுட்டு, ஒரு குதி குதிச்சதுன்னு சொல்லி நரி எப்பிடி குதிக்குமொ அப்பிடி குதிச்சிக் காட்டுனது மீன் குஞ்சு.
கொக்குக்கு சிரிப்பு வந்துட்டது!
ஓம் மாதிரி ரெக்கையில்ல: இருந்திச்சின்னா பறந்து போயி பழத்த பறிக்கலாம்ன்னு மீன் குஞ்சு சொல்லவும் கொக்குக்கு பெருமை வந்துட்டது,தனக்கு இறக்கை இருக்கிறத நினைச்சி.
நரிக்கு பசிஇன்னும் ரொம்ப அதிகமா ஆயிட்டது. எப்பிடியாவது அந்தப் பழத்த கவ்விப் பிடிச்சிரனும்னுட்டு இன்னும் உசரத் துள்ளிக் குதிச்சது. முடியல.
நின்ன இடத்துலயிருந்து குதிச்சா சரிப்பட்டு வராதுன்னு சொல்லி பின்னாலயே கொஞ்ச தூரம் நடந்து போயி ஓடி வந்து, இப்பிடி ஒரே குதியா துள்ளிக் குதிச்சதுபாருன்னு சொல்லிக்கிட்டு மீங்குஞ்சு குளத்துத் தண்ணிக்குள்ள போயி விழுந்துட்டது!
ஏய்ச்சிப் போட்டேம் ஏய்ச்சிப் போட்டேம்
ஏழு ரூவா வாங்கிப் போட்டேம்
பாறைப்பட்டி சந்தையில
பயறு வாங்கித் தின்னுப் போட்டேம்
ஆ அங்கு
ஆ அங்கு ன்னு பாடிக்கிட்டே மீங்குஞ்சு தப்பிப் போயிட்டதாம்.