சற்சூத்திரர்களான சைவ மடாதிபதிகள்
தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் தொன்மையும் பாரம்பரியமும் மிக்கவையாகும்.சைவமும் - தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்டவை.
""இறைவன் என்னைப் படைத்தனன் - தன்னைநன்றாகத் தமிழ் செய்யுமாறே என்ற வாக்கிற்கு இணங்க இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்யப் பிறந்தவை.மூவர் தேவாரங்கள், தேனினுமினிய திருவாசகம், இவற்றிற்கான தமிழ்ப்பண்கள் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் கடமை சைவ மடங்களுக்கு உண்டு.
சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாயன்மார்களும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டதைப் பின்பற்றிச்சாதிப்பாகுபாடு இல்லாத சைவ சமயத்தை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவை சைவ மடங்கள்.
தமிழ்நாட்டுச் சிற்பக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுக்களாகத் திகழும் கோயில்கள் சிதிலமடைந்தபோது உழவாரத் திருப்பணி செய்து அவற்றைப்பேணிக்காக்க வழிகாட்டிய திருநாவுக்கரசரைப் பின்பற்றித் தொண்டு புரிய வேண்டிய கடமை சைவ மடாதிபதிகளுக்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் உள்ள சைவமடங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட கடமைகளைத் தவிர வேறுவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அண்டைநாடான இலங்கையில் திரிகோணமலையில் உள்ள கோணேசுவரம் கோயில், மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரம் கோயில் ஆகியவற்றில் உள்ளஇறைவர்களைப் பாடி வணங்கினார்கள் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர். ஆனால் பாடல்பெற்ற அந்தக் கோயில்களும், மற்றும் நூற்றுக்கணக்கானசைவக் கோயில்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டபோது சைவமடாதிபதிகள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.
சைவ சமயத்தைப் பின்பற்றிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் சைவ மடாதிபதிகள் வாயிருந்தும் ஊமையராக விளங்கினார்கள். சைவம்தமிழும் தழைக்க வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஈழத் தமிழினமே அழியுமானால் சைவம் தழைப்பது எப்படி? தமிழ்வளர்வது எப்படி?
தமிழ் மன்னர்களின் ஆணையின் வண்ணம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் எழுதப்பட்ட கோயில்களில் தமிழ் நுழையத் தமிழ்ப் பகைவர்கள் தடை விதித்தனர். கோயில்களில்இறைவனைப்பாடி வழிபாடு செய்வதற்காகவே எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களைத் தீட்டு மொழி எனப் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களுக்குப் புரியாதவடமொழியில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ மடங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோயில்களிலும் இதே நிலைதான்.
இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வராத சைவ மடாதிபதிகள் தங்களின் நீண்ட தூக்கத்தில் இருந்து விழிப்புப் பெற்று அவசரஅறிக்கையொன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கையா?அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
இலங்கையில் இடிக்கப்பட்ட சைவக் கோயில்களைப் புதுப்பித்துக்கட்ட உழவாரப் பணியை மேற்கொண்டு அங்குச் செல்லப் போவதாகக் கூறும் அறிக்கையா?
அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
பித்தா! பிறை சூடிப் பெருமானே! என நாள்தோறும் சிவனை வழிபட்டு உருகும் நமது மடாதிபதிகள் இப்படியெல்லாம் செய்யப் பித்தர்களா? இறைவன்வேண்டுமானால் பித்தனாக இருக்கலாம். இவர்கள் ஒரு போதும் பித்தர்களாக மாட்டார்கள்.அதிர்ச்சியுடனும், அளவிலாத துயரத்துடனும் அவர்கள் கடந்த 17-11-04 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகச் சைவ ஆதினத் திருமடங்களான திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி, திருப்பனந்தாள், பேரூர் மற்றும் கவுமார திருமடங்களின் தலைவர்கள்சார்பாகக் குன்றக்குடிப் பொன்னம்பலத் தேசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மிகப் பெரிய இந்து சமயத்தலைவர் காஞ்சி ஜெயேந்திரரை முன்னறிவிப்பு இன்றி, வக்கீல் இல்லாமல் இரவில் கைது செய்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கும்,இந்து சமயத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆயிரத்து 500 ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு பெரிய திருமடத்தின் தலைவரை, அவர்களுக்குரியமரியாதையோடு விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை, வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படாமல் கைது செய்திருப்பதுமுறையானதா என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மை.
ஆனால், சட்டத்தைப் பிரயோகப்படுத்தும்போது அவர்களுக்குரிய தன்மையையும் இடத்தையும் பொறுத்துச் செயல்பட வேண்டியது மரபு. ஜெயேந்திரர் இந்துசமுதாயத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர். இந்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர். இவருக்கு இந்நிலை ஏற்பட்டது குறித்துப் பெரிதும்வருந்துகிறோம். உண்மையைக் கண்டறிந்து தடம் புரளாமல் நேர்மை தவறாமல் நன்கு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும். (தினமணி 19.11.04)
ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைச் சைவத் தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களல்லர். சைவ சித்தாந்தத்திற்கு எதிரிடையானது எனக்கருதினார்கள். ஆதிசங்கரரின் தத்துவத்தை ""மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகச் சிறந்ததான ""சிவஞான சித்தியார் எழுதிய அருள்நந்தி சிவாச்சாரியர் ""பரபக்கத்தில் மாயாவாதம் என்று சங்கரரின்அத்வைதத்தைச் சாடியுள்ளார். மாயாவாதத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரிகள் சிவன் கோயில்களில் நுழைவதே தவறு என்பதே உண்மையான சைவர்களின்கருத்து.
ஆனால் சைவக் கோயில்கள் அனைத்தும் சங்கராச்சாரியின் கட்டுப்பாட்டுக்குள் போனபோது முணுமுணுப்புச் செய்யக்கூட முன்வராத சைவ மடாதிபதிகள்பரபரப்புடன் இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள்.
""தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழிபாடு கூடாது. வடமொழி வழிபாடே இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் கூறிவரும்ஜெயேந்திரருக்கு ஆதரவாக அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் சைவமும் - தமிழும் தழைக்க வந்த மடாதிபதிகள்.
அடடா! என்ன கவலை? எத்தகைய அக்கறை? இந்தக் கவலையும் இந்த அக்கறையும் இவர்களிலேயே ஒருவர் கைது செய்யப்பட்ட போது உருவாகாததுஏன்? சைவமடங்களில் பெரியதும் தலையாயதுமான திருவாவடுதுறை ஆதின இளைய சன்னிதானம் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்குத்தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சாதாரண கிரிமினல் குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார். அவருக்குப்பிணை கிடைக்கவே 8மாதங்களுக்கு மேலாயிற்று. இவ்வளவுக்கும் கொலை முயற்சிச் சதிக்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஆனால் கொலைக்குற்றத்திற்கு ஆளான ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிக்கப்பட்டுவிட்டதாக அங்கலாய்க்கும்சைவமடாதிபதிகள் திருவாவடுதுறை இளைய ஆதினம் கொலை முயற்சிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டபோது வாய்மூடிக் கிடந்தது ஏன்? சிவமேஎனச சும்மா கிடந்தது ஏன்?
""தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என முழங்கினார் புரட்சிக் கவிஞர். ஆனால் ""தமிழ் நீச பாஷை என வாய் கூசாமல் பழித்தவரும்,கொடிய கொலைக் குற்றத்திற்கு ஆளானவருமான ஒருவருக்காகக் கண்ணீர் வடிக்கும் சைவ மடாதிபதிகள் தாங்கள் ""சற்சூத்திரர்களே என்பதை மீண்டும்உறுதி செய்துள்ளனர்.
(தென்செய்தி டிசம்பர் 01-15 இதழில் வெளியான கட்டுரை)
பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட தென்செய்தி, மாதமிருமுறை இதழாக வெளிவருகிறது. சந்தா செலுத்த மற்றும் தொடர்பு கொள்ளவிரும்பும் நண்பர்கள் பின்வரும் முகவரியில் முயலலாம்.
தென்செய்தி, 33, நரசிம்மபுரம், மயிலை, சென்னை - 600 004. தொலைபேசி : 91-44-2464-0575, தொலைநகலி : 91-44-2495-3916
- பழ. நெடுமாறன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. சகுனிகள் வரிந்து கட்டுகிறார்கள்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.