நதிச்சிறை: புத்தக விமர்சனம்
முதல் தொகுப்பு என்றாலே ஒரு சில கவிதைகள் மட்டுமே அதில் தேறும். ஆனால், ந.பெரியசாமியின் இந்தத் தொகுப்பில் பலகவிதைகள் சிறந்தவையாக உள்ளன.
தனது படைப்பின் மீது உள்ள நம்பிக்கையாலோ என்னவோ, இதற்கு யாரிடமும் அணிந்துரையோ, மதிப்புரையோ இவர் வாங்கவில்லை.தனது கவிதைக்கான விசிட்டிங் கார்டாக தனது கவிதைகளே இருக்கட்டும் என்று நினைத்து விட்டார் போலும்.
அழகான, ரத்தினச் சுருக்கமான முன்னுரையை வைத்து விட்டு, கவிதைகளை படிக்க நம்மை அனுப்பிவிடுகிறார். முன்னுரையே இவரதுகுழந்தை உள்ளத்தை சொல்லும்.
கவிதைகள் இன்னும் ஆச்சரியங்களையும், பிரமிப்பையும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. எப்படித்தான் எழுதுகிறார்களோ என வியந்த நானும் எழுதி தொகுப்பாக்கி விட்டேன். என்னால் எழுதப்பட்டவை என்பதற்காக மிகச் சிறந்த கவிதைகள் எனக் கூறவில்லை. எனை பாதித்த, தோன்றிய விசயங்ளை எனக்குத் தெரிந்த கொஞ்ச வார்த்தைகளைக் கொண்டு கவிதையாக்கியுள்ளேன். மழலைகள் எதை பேசினாலும், கிறுக்கினாலும் சந்தோசம் பூக்கும் மனம் கொண்ட தாங்கள் இதையும் ஏற்றுக் கொள்வீர்களென நம்புகிறேன்.
புத்தகத்தின் தலைப்பாகிய நதிச்சிறை கவிதை ஒன்று போதும், கவி சாம்சாஜ்யம் ஒன்று இவருக்காக காத்திருக்கிறது என்பதைக்காட்ட. இதோ கவிதை:
அழகில் வியந்து
ஆளுமையில் பிரமித்து
சீற்றத்திற்கு பயந்து
சிதறிய சாரலில்
உடல் சிலிர்த்து
தழுவலில் வெப்பம் தணிய
என்னுள் அற்புதங்களை
நிகழ்த்திய நதி
அடைபட்டுக் கிடக்கிறது
பெட்டிக்கடைகளில்
பாக்கெட்களாக...
(நதிச்சிறை: ந.பெரியசாமி, பக்கம் 64, விலை ரூ.20, நூதனா பதிப்பகம், பி-2, தொலைபேசி ஊழியர் குடியிருப்பு, பஸ் நிலையம் எதிரில்,ஒசூர்-635 109)