விஜய்யின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு
தமிழகம் பேச்சுக்குப் புகழ் பெற்றது. அது தமிழ் மொழியின் சிறப்பம்சம். யாராக இருந்தாலும் தமிழ் பேசினால் கூடவே அவருக்கும் சேர்ந்து பெயர்
கிடைத்து விடும். அந்த அளவுக்கு வீச்சு கொண்டது தமிழ்.
அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, கிருபானந்த வாரியார், சாலமன் பாப்பையா, வைகோ, வைரமுத்து என தமிழகம் கண்ட தலைசிறந்த பேச்சாளர்கள் பலர்.
தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழி மட்டும் அல்ல, அது அவர்களது வாழ்க்கை, மூச்சு, தமிழனின் அடையாளம். இந்த நிலையில்தான் விஜய் டிவி நிர்வாகம், தமிழை முதன்மைப்படுத்தி ஒரு புதிய நிகழ்ச்சியைப் படைக்க முடிவு செய்தது. அதில் பிறந்ததுதான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.
தமிழகத்தின் சிறந்த பேச்சாளரைத் தேடும் தேடல்தான் இந்த வித்தியாசமான நிகழ்ச்சி.
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பவுள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தியது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இந்த பேச்சாளர் தேடல் தொடர்ந்தது.
தகுதிச் சுற்றில், தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் பேசப் பணிக்கப்பட்டனர்.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் போட்டியின் நடுவர்களாகப் பணியாற்றியுள்ளனர். மொத்தம் 6 மண்டலங்களிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் தகுதிச் சுற்றில் தேறி
அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
பின்னர் அவர்களிலிருந்து 30 பேர் இறுதியாக போட்டிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இவர்கள் கதை சொல்வது, கவிதை படிப்பது, பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுக்களில் பங்கு கொண்டு தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும்.
இந்த சுற்றுக்களின் இறுதியில், வெற்றி பெறும் பேச்சாளருக்கு, தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர் என்ற பட்டம் சூட்டப்படும். அது போக, ரூ. 5 லட்சம் பரிசும் காத்திருக்கிறது.
மார்ச் 2ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியைக் கண்டு, கேட்டு ரசிக்கலாம்.
இந்த நிகழ்ச்சி குறித்து விஜய் டிவியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் கே.ஸ்ரீராம் கூறுகையில், தமிழ் மொழிக்கும், அதனுடன் தொடர்புடைய மாபெரும் தலைவர்கள், பேச்சாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், நன்றி கூறும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கியுள்ளோம்.
நல்ல தமிழில் பேசுவதை ஊக்குவிக்கும் வகையிலான சிறிய முயற்சியே இது என்றார் ஸ்ரீராம்.