செய்தித்தாள்களுக்கு கடிதம்: டெல்லி தம்பதி கின்னஸ் சாதனை
டெல்லி: செய்தித்தாள்களின் ஆசிரியர் பகுதிக்கு அதிகளவில் கடிதம் எழுதி வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற தேள்கடி, மூக்கில் விட்ட பாம்பை வாய் வழியாக எடுப்பது, உடம்பில் தேன் கூடு கட்டுவது என்று சாதனை முயற்சியை எக்குத்தப்பாய் செய்வோர் பலர் உள்ளனர்.
இவர்களுக்கு மத்தியில் சமுதாய நோக்குடன் ஒரு தம்பதி செய்த காரியம் கின்னஸ் வரைக்கும் அவர்களை அழைத்துச் சென்றுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பிசினஸ்மேன் சுபாஷ் சந்திர அகர்வால் - மது அகர்வால் தம்பதி. செய்தித்தாள், வார இதழ்களில் பிரசுரமாகும் ஆசிரியர் பக்கத்துக்கு கடிதங்களை எழுதி பொது பிரச்சனைகள் குறித்து அலசுவது இந்த தம்பதிக்கு பிடித்தமான விஷயம்.
கடந்த 1967ல் தைனிக் இந்துஸ்தான் என்ற பத்திரிகைக்கு பஸ் டிக்கெட் கொடுக்காத கன்டக்டர் பற்றிய தனது அதிருப்தியை தனது முதல் கடிதம் மூலம் எழுதினார் சுபாஷ். அந்த பழக்கம் 31.1.2006 வரை 3699 கடிதங்களை எழுத வைத்துள்ளது.
அவரது மனைவி மது அகர்வால் கடந்த 2004ம் ஆண்டு வரை 447 கடிதங்களை செய்தி ஆசிரியர் பகுதிக்கு எழுதியுள்ளார். இவர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாகி, அவர்கள் மேற்கோள் காட்டிய பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைத்துள்ளது என்பதுதான் இதில் விசேஷம்.
செய்திதாள்களுக்கு அதிக அளவிலான கடிதங்களை எழுதியதற்காக இந்த தம்பதி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ஆசிரியர் பக்கம் பகுதிக்கு கடிதம் எழுதி, பலன் கிடைத்ததன் மூலம் மீடியாவின் சக்தி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார் சுபாஷ். உடல் ஊன முற்ற நிலையிலும் பொது பிரச்சனைகள் குறித்த தனது கடித கருத்துக்களை செய்திதாள்களோடு சுபாஷ் பகிர்ந்து வருகிறார்.
மக்களுக்கு தெரியாத விஷயங்களை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிக் கொண்டு வந்துள்ளார். நீதிபதிகளின் பயண செலவுகள் முதல் கொண்டு சுடுகாடு வரையிலான தகவல்களை பெற்று தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications