செடி, கொடிகளுக்கும் இரங்கும் கரூர் போலீஸ்காரர்

கரூர் நகர காவல் நிலையத்தில் காவலராக இருப்பவர் சம்பத். இவர் கரூர் ஜவஹர் பஜாரில் தாலுக்கா அலுவலகம் அருகில் உள்ள காவல் பீட்டில் பணியில் இருப்பார்.
அவர் பணியில் உள்ள போதும் சரி, அல்லது பணியில் இல்லாத நாட்களிலும் சரி கரூர் தாலுக்கா அலுவலகம் எதிரே உள்ள செடிகள் மீது அவருக்கு ஒரு காதல்.
அதனால் தான் சொந்தமாக பணம் போட்டு வாங்கி வைத்துள்ள பூவாளியில் மாலை நேரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அந்த செடிகளுக்கு நாள் தவறாமல் ஊற்றி பசுமை தழைக்கச் செய்து வருகிறார்.
காவல்துறை இதயம் கெட்டுவிட்டதாக பலரும் கூறிவரும் இந்த தருணத்தில் ஒரு காவலர், ஈரமுள்ள இதயத்துடன் தாவரங்களுக்கும் இரங்கும் இந்த செயல் அனைவரையும் கவர்ந்தள்ளது. இந்தக் காவலரை அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
ஏன் இந்த பாசம் என்று காவலர் சம்பத்திடம் கேட்டபோது,
சார், நான் பணியில் சேர்ந்து 33 வருடங்கள் ஆகின்றன. எனக்கு செடி, கொடி, மரங்கள் மீது ஒரு பற்று உண்டு.
மரங்கள் இருந்தால் தான் நாட்டில் மழை பெய்யும், மழை பெய்தால் தான் விவசாயம் வளரும். விவசாயம் நல்லா இருந்தால் தான் நாடு செழிக்கும்.
மேலும், செடிகள், மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதை எனது கடமையாக செய்து வருகிறேன். அந்த செடியை பார்ப்பவர்களுக்கு நாமும் இது போல் பதுமையை தலைக்க வைக்க வேண்டும் என்று எண்ணம் வர வேண்டும்.
அதற்காகத்தான் இப்படி செய்து வருகிறேன். மற்ற ஊர்களில் பணியாற்றிய போதும் அருகில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வருவது எனது கடமையாக கொண்டுள்ளேன் என்றார்.
காவலர் சம்பத் பணியை பாராட்டி கரூர் லயன்ஸ் சங்கம் விருது வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications