2 தமிழக சிறுமிகளுக்கு தேசிய விருது
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் தேசிய 'இளந்திரு' விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்திய அரசு ஒவ்வொர் ஆண்டும் தேசிய இளந்திரு என்னும் விருதை மேடைக் கலை, அறிவியற் கலை, படைப்புக்கலை, எழுத்துக் கலை ஆகியவற்றில் புதுமை படைத்திடும் திறமையுடைய சிறார்களுக்கு வழங்குகிறது.
இவ்விருது குடியரசுத் தலைவரால் டெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து வழங்கப்படுகிறது.
2007ம் ஆண்டிற்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 சிறுமிகள் இந்திய அளவில் இளந்திரு விருதை வென்றுள்ளனர்.
திருச்சிராப்பள்ளி ஜவகர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதி மேடைக் கலைக்காகவும், சென்னை ஜவகர் சிறுவர் மன்றத்தைச் சேர்ந்த சுவேதா, விஸ்வகர்மா படைப்புக் கலைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஜூன் மாதம் 10ம் தேதி குடியரசுத் தலைவரால் இவ்விருது வழங்கப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.