சென்னை ஆட்டோக்களில் சுற்றுலா ஸ்தலங்களின் ஓவியங்கள்!
சென்னை: தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை நகரில் ஓடும் ஆட்டோக்களில், தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களின், பாரம்பரிய இடங்களின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநர் எம்.ராஜாரம் கூறுகையில், சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் என்ற திட்டத்தை சுற்றுலாத்துறை தொடங்கியுள்ளது. அதன்படி ஆட்டோ டிரைவர்களுக்கு, தமிழகத்தின் சுற்றுலா தலங்கள் குறித்தும், சுற்றுலாவை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆட்டோக்களில் தமிழகத்தின் பாரம்பரியச் சின்னங்கள், முக்கிய சுற்றுலா தலங்களின் படங்களை ஓவியங்களாக வரையத் திட்டமிட்டுள்ளோம்.
ஆட்டோ டிரைவர்களை சிறந்த சுற்றுலா தூதுவர்களாகவும் மாற்றும் திட்டமும் இதில் அடங்கும். முதல் கட்டமாக முக்கிய இடங்கள், ரயில் நிலையங்களைச் சேர்ந்த 30 ஆட்டோக்களைத் தேர்வு செய்து அவற்றை சுற்றுலா நட்பு ஆட்டோக்களாக மாற்றியுள்ளோம்.
இந்த ஆட்டோக்களின் டிரைவர்களுக்கு விபத்து காப்பீட்டு வசதி செய்து தரப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு ஆயுள் காப்பீட்டு வசதி செய்து தரப்படும். இதுதவிர அவர்களுக்கு சுற்றுலாத் துறை சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்படும்.
இந்த ஆட்டோக்கள் சென்னை நகரின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிலை கொண்டிருக்கும். இந்த ஆட்டோக்களை அணுகும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆட்டோ டிரைவர்களே சுற்றுலா கைடு ஆகவும் செயல்படுவார்கள். அன்பான முறையில், நட்பான முறையில் சுற்றுலா பயணிகளிடம் பழகுவது குறித்தும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தமிழகத்தின் முக்கிய பாரம்பரிய இடங்கள் குறித்த விவரம், அவற்றின் பின்னணி, பெருமை உள்ளிட்டவை அடங்கிய கையேடும் டிரைவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் வெறும் டிரைவர்களாக மட்டுமல்லாமல், நல்ல கைடுகள் ஆகவும் இந்த டிரைவர்கள் செயல்படுவர்.
அடுத்த கட்டமா, சென்னை நகரின் பஸ் நிலையங்கள், பிற ரயில் நிலையங்களில் இத்தகைய ஆட்டோக்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications