For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி பிறந்த நாள் இனி புத்தக திருநாள்!

By Staff
Google Oneindia Tamil News

தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி இனி புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம்.

இந்த அறிவிப்பை ஜெயகாந்தன் இன்று வெளியிட்டார்.

தமிழ் மொழி, தமிழ்ப் பதிப்பாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் வாசகர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல சிறந்த திட்டங்களைச் செய்தவர் முதல்வர் கலைஞர். எனவே இப்படி ஒரு விழாவுக்கும் போற்றுதலுக்கும் உரியவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் வியப்பில்லை என்றார் ஜெயகாந்தன்.

தமிழை உயர் தனிச் செம்மொழியாக்கப் பாடுபட்டது, பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கையை 600லிருந்து 1000 ஆக உயர்த்தியது, தனது சொந்த நிதி ஒரு கோடியை அளித்து, அதிலிருந்து வரும் வட்டித் தொகையைக் கொண்டு ஆண்டுதோறும் 5 தமிழ் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதமும், பிற மொழி எழுத்தாளர் ஒருவருக்கு ஒரு லட்சமும் கொடுத்து வருவது,

ரூ.100 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த நூலகம் அமைந்திட அனைத்து முயற்சிகளையும் செய்தது, பதிப்பாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் உதவிடும் வகையில் புத்தகப் பூங்கா அமைத்திட உத்தரவிட்டது என கருணாநிதி செய்த ஏராளமான தமிழ்ப் பணிகளுக்காக இந்தச் சிறப்பு அவருக்கு செய்யப்படுவதாக தமிழ்நாடு தமிழ்ப் பதிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

பொது நூலகத்துறையைச் சேர்ந்த மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், தமிழ் வளர்ச்சித் துறை, கன்னிமாரா நூலகம், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இனி ஜூன் 3ம் நாளை புத்தகத் திருவிழா தினமாகக் கொண்டாடுவார்கள்.

அன்றைய தினம் ஒவ்வொரு புத்தக விற்பனைக்கும் 10 சதவிகிதம் சிறப்புக் கழிவாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் கே.எஸ்.புகழேந்தி மற்றும் அலையன்ஸ் ஸ்ரீனிவாசன் ஆகியோரும் இந்த அறிவிப்பின்போது உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X