இன்று வீரவாஞ்சி நினைவு நாள்
இன்று (ஜூன்-17) சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 97-வது நினைவு தினம்.
1911-ம் ஆண்டு ஜூன் மாதம் இதே நாளில்தான் வீ்ரவாஞ்சிநாதன் ஆங்கிலேய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிராக பொங்கி எழுந்து நெல்லை கலெக்டராக இருந்த ஆஷ்துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
போலீசில் பிடிபட்டு ஒரு வெள்ளைக்காரன் கையில் சாகக் கூடாது என்ற வைராக்கியத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே அதே துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார்.
தனது 25-வது வயதில் உயிர் தியாகம் செய்து இந்திய நாட்டின் விழிப்புணர்வுக்கு பாடுபட்ட அவரது நினைவு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், இன்னமும் அவருக்கு ஒரு மணிமண்டபம் கட்டாத்து மக்கள் மனதில் ஒரு பெரும் குறையாகவே உள்ளது.
51 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் செங்கோட்டையில் வீர வாஞ்சி மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். வெறும் அடிக்கல்லோடு நிற்கும் அந்த மணிமண்டபம் இப்போதாவது எழுப்பப்பட வேண்டும் என்பது செங்கோட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
வாஞ்சியின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்படுவதற்குள்ளாவது மணிமண்டபம் எழுப்பப்படுமா? இந்தக் கோரிக்கை முதல்வர் கவனத்துக்குப் போகுமா?