தன்னம்பிக்கை, முயற்சியும் சாதனையின் ரகசியம்
மண்ணச்சநல்லூர்: தன்னம்பிக்கையும் முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் கூறினார்.
திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை இரவு கனவு மெய்ப்பட என்ற இளையோர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன், பேசியதாவது:
தன்னம்பிக்கையும், முயற்சியும் இருந்தால் வாழ்வில் முன்னேற முடியும். வாழ்கிற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமாக இருக்க வேண்டும்.
எதைச் செய்தாலும் நாம் தன்னிச்சையாக செய்ய வேண்டும். தினமும் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்கிறோம். வாழ்வில் ஏற்படும் திருப்பத்தை ம் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
ரஷியப் புரட்சியாளர் ஸ்டாலின் சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்தவர்தான். பின்னாளில் ரஷிய நாட்டுக்கே அதிபரானார். அதுபோல், ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் தந்தை மாமிசக் கடை வைத்திருந்தார்.
ஒருவர் முன்னேறுவதற்கு பிறப்பு தடையல்ல என்பதை உணர வேண்டும். கல்வியும், உழைப்பும் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம். மாணவர்கள் நூலகம் சென்று நிறைய கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பிறர் நம்மை நேசிப்பதைவிட நாம் நம்மை நேசிக்க வேண்டும்.
மாணவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். படிக்கும் காலத்தில் மனதில் பதிய வைப்பதுதான் வாழ்க்கையில் கூட வரும்.
நம்நாடு தகவல் தொழில்நுட்பத் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக உள்ளது. இதற்குக் காரணம் நம்நாட்டின் இளைஞர்களின் திறமையே என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications