அரிய நூல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும்!- பொள்ளாச்சி மகாலிங்கம்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இதில் வாய்ப்பாட்டு கலைஞர் கந்தசாமிக்கு ஒரு லட்ச ரூபாய் நினைவுப் பரிசினை வழங்கினார் முன்னணி தொழிலதிபரும் இலக்கியப் புரவலருமான அருட்செல்வர் டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம்.
விழாவில் அவர் பேசியதாவது:
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தோற்றுவித்த பெருமைக்குரிய இந்த அண்ணாமலை பல்கலைகழகத்தில் மிகச் சிறந்த அறிஞர்கள் பலர் பணியாற்றி சிறப்புச் சேர்த்துள்ளனர்.
இன்று கச்சேரிகளில் தேவாரம், பிரபந்தம் என தமிழிசையைக் கேட்க முடிகிறது. தமிழிசையை எல்லா வித்வான்களும் போற்றிப் பாடுகின்றனர். தமிழ் இசைக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நமது அண்ணாமலைச் செட்டியார்.
இப்போது கவலை தரும் விஷயம், நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் பழைய நூல்கள் அழிந்து வருவதுதான்.
அண்ணாமலைப் பல்கலைகழகம் இத்தகைய நூல்களைப் புதுப்பித்து வெளியிட முன்வர வேண்டும்.
டெல்லி இந்தியா கேட்டில் உள்ளது போல ஒரு சர்வதேச மையத்தை அண்ணாமலை பல்கலைகழகம் சென்னையில் துவங்க வேண்டும்.
அதோடு ஆசிய மொழிகள் மற்றும் வரலாறு குறித்த ஆய்வு மற்றும் கல்வியை வழங்கும் வகையில் ஒரு பள்ளியை அண்ணாமலை பல்கலை வளாகத்தில் துவங்க வேண்டும் என்றார்.
இவ்விழாவில் அண்ணாமலை பல்கலைகழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ஏ ராமசாமி அண்ணாமலை செட்டியார், அறக்கட்டளைத் தலைவர் முத்தையா, இராம வீரப்பன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications