கட்டுரைப் போட்டியில் வென்ற தூக்கு தண்டனை கைதி
திருச்சி மத்திய சிறையில் நடந்த கட்டுரைப் போட்டியில் நாகர்கோவிலை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி முதல் பரிசு பெற்றார்.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், உள்பட சுமார் 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். உலக மனித உரிமைகள் தின விழாவையொட்டி கைதிகளிடம் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு மனிதநேயம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் 23 கைதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கவிதை, கட்டுரை, பேச்சுத் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. மத்திய சிறை எஸ்பி முருகேசன் வரவேற்று பேசினார். ஜோசப் கல்லூரி விரிவுரையாளர் தாண்டீஸ்வரன், விமலா ராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக மதிப்பெண் பெற்ற கைதிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டுரைப் போட்டியில் ராதாகிருஷ்ணன் என்ற கைதி முதல் பரிசு பெற்றார். 30 வயதான இவர் திருமணம் ஆகாதவர். நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த கொலை வழக்கில் இவர் உள்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வரை தண்டனை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு முன்பு சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
கோர்ட்டுக்குள் நடந்த கொலை வழக்கில் ராதாகிருஷ்ணனுடன் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 2 கைதிகளும் தற்போது திருச்சி மத்திய சிறையில் தான் இருக்கிறார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என்கிற சூழ்நிலையிலும் கைதி ராதாகிருஷ்ணன் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, தனது எழுத்து திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசை தட்டி சென்றார்.
இவர் அஞ்சல் வழியில் பட்டப்படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினையும் சிறைத்துறை அதிகாரிகள் மூலமாக அனுப்பி இருக்கிறாராம்.