கண் குத்த உரிமை கோரும் விரல்கள்- கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி கண்களை குத்த உரிமை கேட்கும் விரல்கள் என்ற பெயரில் பூடக அரசியல் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கவிதை இதோ...
விரல்கள் வேகமாக வந்தன,
விழிகளை நோக்கி!
"ஏன்? எதற்காக?'' என்று;
வினா எழுப்பின விழிகள்.
"விரல்களாம் நாங்களும்
உன்னோடிணைந்துள்ள உடலின் பகுதிதானே?''
"அதிலென்ன சந்தேகம்?
அதற்காக இப்போதென்ன?''
"விழியில் நீர் என்றால்
விரைந்து துடைப்பது விரல் தானே?
விழிக்கோர் விபத்து வருமுன் பாய்ந்து
பழிக்கோர் இடமின்றி பத்து விரலும் சேர்ந்து;
கண்மூடிக் காவல் காப்பதும் மெய் தானே?
விண் மூடி மேகம் சூழ்ந்தால் மழை பொழியும்-அப்போது
தண்ணிலவும் தணல் கதிரும் மறைந்திருக்கும் என்பதாலே, இந்த
மண்மீது இனி அவை ஒளியுமிழ வரக் கூடாது எனலாமோ?
அவ்வாறே விரல்களாம் எங்களுக்கும்
அனுமதி தர வேண்டும் எனக்கேட்கும் உரிமை உண்டு!
நாங்கள் தானே நண்பராய் சேவகராயிருந்து உம்
நலன் காத்து வருகிறோம் கண்களே! அதனாலே...''
"அதனாலே என்ன?'' என்றன விழியிரண்டும்;
அதற்கு விரல் சொன்னது;
கண்ணீர் துடைத்திடவும், காத்திட இமை சாத்திடவும்
கடமையாற்றும் எமக்கு; உமது
கருவிழியில் குத்திட மட்டும்
ஒரு உரிமையிலையோ?!''
எனக் கேட்ட கதை;
நல்ல கதையா? கெட்ட கதையா?
இவ்வாறு தனது கவிதையில் முதல்வர் கூறியுள்ளார்.
யாரைச் சொல்கிறார்.. உங்களுக்குத் தெரிகிறதா டாக்டர் ராமதாஸ்?