கவுன்சிலராக கலக்கும் எச்ஐவி பாதித்த பெண்
தேனி: தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராம பஞ்சாயத்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்ஐவியால் பாதிக்கப்பட்ட ஈஸ்வரி என்ற பெண் அனைவரும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் ஒதுக்கித் தள்ளும் கதைகளைத்தான் நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி கிராம மக்கள் தங்களது கவுன்சிலராக எச்ஐவி பாதித்த ஈஸ்வரி என்ற பெண்ணைத் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த 2 வருடங்களாக ஈஸ்வரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தனது கிராமத்தில் அடிப்படை சுகாதார வசதிகளை சிறப்புற செய்து கொடுத்துள்ளார். பல வருடங்களாக இவை சாத்தியமில்லாத விஷயங்களாக இருந்தவை. ஆனால் ஈஸ்வரியின் அயராத முயற்சியால் இப்போது அடிப்படை சுகாதார வசதிகள் சிறப்பாக உள்ளன.
நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, பளிச்சென எரியும் தெரு விளக்குள் இப்படி பல வசதிகளை ஈஸ்வரி எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் என கிராம மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.
அவர் என்ன வேண்டும் என்று கேட்டாலும், அதைச் செய்து தர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்கிறார் கோடங்கிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திருக்கண்ணன்.
இப்படி கிராமமே கொண்டாடும் ஈஸ்வரியின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டும் சோகத்தில் நிரம்பியுள்ளது.
ஈஸ்வரிக்கு அவரது கணவர் மூலம்தான் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டது. அது அவரது இரு குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டது. இதன் காரணமாக எய்ட்ஸ் பாதித்து இரு குழந்தைகளும் இறந்து போய் விட்டனர்.
தற்போது ஈஸ்வரி, அவரது கணவர் மற்றும் கடைசி மகன் ஆகியோர் மருந்து, மாத்திரைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனது சாதனை குறித்து ஈஸ்வரி கூறுகையில், நம்மால் எதையும் சாதிக்க முடியும். எச்.ஐ.வி. பாதிப்பு என்பதை எனது மனதிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டுத்தான் நான் தேர்தலில் போட்டியிட்டேன், வென்றேன். இதை நான் பெரிய சாதனையாக கருதுகிறேன் என்கிறார் புன்னகையுடன்.
கிராம மக்களுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், எச்.ஐ.வி. ஒழிப்புப் பிரசாரத்திலும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் ஈஸ்வரி.