திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் தமிழ் புத்தகக் கடை திறப்பு
தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ் புத்தகக் கடை திறக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பேருந்து நிலையங்களில் தமிழ் புத்தகக் கடைகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள கடையில் கோவை விஜயா பதிப்பகத்தினர் புத்தகக் கடை அமைத்துள்ளனர்.
இதில் பொது அறிவு, ஆன்மிகம், ஜோதிடம், சுயமுன்னேற்றப் புத்தகங்கள், சமையல், மருத்துவம், கணினி, கவிதை, இலக்கியம், முன்னணி எழுத்தாளர்களின் நாவல்கள் என அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்கும். ஆர்டர்களின்பேரில் தேவைப்படும் புத்தகங்கள் பெற்றுத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புத்தகக் கடையை துணை மேயர் கே.செந்தில்குமார் திறந்து வைத்தார். முதல் விற்பனையை திருப்பூர் மாவட்ட தனி அதிகாரி சி.சமயமூர்த்தி தொடங்கி வைக்க, திருப்பூர் தமிழ்ச் சங்க செயலர் ஆடிட்டர் லோகநாதன் பெற்றுக் கொண்டார்.
பதிப்புத்துறை முன்னோடியான சக்தி வை.கோவிந்தன் உருவப்படத்தை மாமன்ற உறுப்பினர் கே.சம்பத்குமார் திறந்து வைத்தார்.