முதுகுளத்தூரிலிருந்து மேலச்செல்வனூருக்கு இடம் மாறிய பறவைகள்!
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் வரும் வெளிநாட்டு பறவைகள் தற்போது அதைத் தவிர்த்துவிட்டு அருகே உள்ள மேலச்செல்வனூரில் தஞ்சமடைந்துள்ளன.
முதுகுளத்தூர் தாலுகாவில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய கிராமங்களில் ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் உள்ள அடர்ந்த கருவேல மரங்கள் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக இருந்து வருகின்றன.
இவ்வாறு வரும் பறவைகளுக்கு அப்பகுதி மக்கள் எந்த தொந்தரவும் கொடுப்பதில்லை. அவற்றிற்கு தக்க பாதுகாப்பு கொடுத்து வந்தனர். இதனால் இந்த கிராமங்கள் பறவைகள் சரணாலயமாக விளங்கி வந்தன.
இந்த பறவைகள் தங்கி செல்லவும், சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டு ரசிக்கவும் வனத் துறை சார்பில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. சரணாலயம் என்ற போர்டு மட்டுமே உள்ளது.
இந் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த கிராமங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் வருவது நின்று போய்விட்டது. இவை மாற்று இடம் தேடி கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்துள்ளன. இங்குள்ள கண்மாயில் மரங்கள் அடர்ந்துள்ளதாலும், தண்ணீர் தேங்கியுள்ளதாலும் பறவைகள் மேலச்செல்வனூரில் தங்கி விட்டன.
இங்கு வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடவும், தொல்லை கொடுப்பதையும் ஊராட்சி நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும் பறவைகளை பாதுகாக்க வனத்துறையினருடன் கிராம மக்கள் இணைந்து செயல்படுகின்றனர்.
இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பறவைகள் மேலச்செல்வனூருக்கு வந்துள்ளது.