8 வயது சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம்!
விழுப்புரம் தாலுகா கண்டமங்கலம் அருகில் உள்ளது பள்ளிப்புதுப்பட்டு கிராமம்.
இந்த கிராமத்தில் பழங்காலத்தில் காலரா நோய் பரவியதாகவும், அப்போது சிவன் தவளை உருவும், அம்மன் சிறுமி உருவும் எடுத்து அவர்களுக்கு திருமணம் நடத்தினால் காலரா நோய் குணமாகும் என்று கூறியதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது.
இந் நிலையில், அந்த கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமண நிகழ்ச்சி நடந்தது.
திருமணத்தை முன்னிட்டு, பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன் முறை குடும்பத்தினர் மாப்பிள்ளை வீட்டாராகவும் கருதப்பட்டனர்.
மாப்பிள்ளை வீட்டார் என்று கூறப்படும் தவளை சார்பில் சீர்வரிசையுடன் மாலை 4 மணிக்கு பெண் பார்க்க ஊர்வலமாக சென்று பெண்ணை பார்த்தனர்.
இந்த திருமணத்திற்கு பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் விக்னேஸ்வரி (8) திருமணப் பெண்ணாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டார்.
பின்னர் மாப்பிள்ளையாக கருத்தப்படும் தவளையை தேடும் படலம் நடந்தது.
கோவில் குளத்தில் பல மணி நேரம் தேடி ஒரு தவளை கூட கிடைக்கவில்லை.
பின்பு ஒபு வழியாக ஒரு தவளை கிடைத்து. அந்த தவளையை மாப்பிள்ளையாக கருதி மணமேடையில் வைத்தனர்.
பெண் வீட்டார் சிறுமி விக்னேஸ்வரியை மணப் பெண்ணாக அலங்கரித்து தெருக்களில் அழைத்து சென்று மண மேடைக்கு கிராம மக்கள் அழைத்து சென்றனர்.
பள்ளிப்புதுப்பட்டு கிராம ஆரம்ப பள்ளி அருகில் அமைக்கப்பட்டு இருந்த மணமேடையில் மணமகன் தவளை, மணமகள் சிறுமி அமர வைக்கப்பட்டு, இந்து திருமண முறைப்படி மந்திரங்கள் ஓதி, நேற்றிரவு 7.30 மணிக்கு தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்தி வைத்தனர். தவளை சார்பில் பூசாரி சிறுமிக்கு தாலி கட்டினார்.
தாலி கட்டியபிறகு பெண்ணுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சியில் கிராம மக்கள் வரிசையாக வந்து நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை தவளையை மறுபடியும் குளத்தில் விட்டுவிட்டனர்.
கடும் நோய் உள்ள சிறுமிகளுக்கு இது போன்று திருமணம் நடத்தினால் நோய் தீர்ந்து விரைவில் குணமாகும் என்பது இந்த கிராமத்தில் உள்ள நம்பிக்கையாகும்.
தொடர்பான செய்திகள்:
சிறுமி-தவளை திருமணம்: விசாரணைக்கு உத்தரவு